

உன்னாவ்,
உத்தரபிரதேசத்தின் உன்னாவ் மாவட்டத்தை சேர்ந்த 23 வயது இளம்பெண் ஒருவர் கடந்த சில மாதங்களுக்கு முன் கற்பழிக்கப்பட்டார். இதில் கைது செய்யப்பட்டு ஜாமீனில் வெளியே வந்தவர்கள் கடந்த வாரம் அவரை உயிரோடு எரித்துக்கொலை செய்தனர். இந்த சம்பவம் நாடு முழுவதும் பெரும் அதிர்ச்சியையும், பரபரப்பையும் ஏற்படுத்தி உள்ளது.
முன்னதாக தன்னை கற்பழித்த நபர்களால் தனது உயிருக்கு அச்சுறுத்தல் இருப்பதாக அந்த இளம்பெண் போலீஸ் நிலையத்தை நாடியிருந்தார். ஆனால் இதை போலீசார் கண்டுகொள்ளாமல் இருந்ததாக தெரிகிறது.
எனவே இளம்பெண் கொல்லப்பட்ட சம்பவத்தில் அலட்சியமாக இருந்ததாக உன்னாவின் பிகார் போலீஸ் நிலையத்தில் பணியாற்றி வந்த 7 போலீஸ்காரர்களை அரசு இடைநீக்கம் செய்துள்ளது. இதில் இன்ஸ்பெக்டர் அஜய் திரிபாதி, சப்-இன்ஸ்பெக்டர் அரவிந்த் சிங் ரகுவன்ஷி ஆகியோரும் அடங்குவர்.
இந்த தகவலை மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு விக்ராந்த் வீர் தெரிவித்தார். மேலும் பெண்கள் பாதுகாப்பு தொடர்பான நடவடிக்கைகளை கடுமையாக பின்பற்றுமாறு அனைத்து போலீஸ் நிலையங்களுக்கும் சுற்றறிக்கை அனுப்பப்பட்டு இருப்பதாகவும் அவர் கூறினார்.