வேறு சாதி இளைஞரை திருமணம் செய்த இளம்பெண் ஆணவக் கொலை - தந்தை, சகோதரர் கைது

வேறு சாதி இளைஞரை திருமணம் செய்த இளம்பெண்ணை ஆணவக் கொலை செய்த தந்தை மற்றும் சகோதரரை போலீசார் கைது செய்தனர்.
கிரேட்டர் நொய்டா,
உத்தரபிரதேச மாநிலம் கிரேட்டர் நொய்டாவைச் சேர்ந்தவர் நேஹா ரத்தோர் (23 வயது). இவர் ஹாபூரைச் சேர்ந்த சூரஜ் என்ற வேறு சாதி இளைஞரை காதலித்துள்ளார். இது நேஹாவின் தந்தை பானு ரத்தோர், சகோதரர் ஹிமான்ஷு ரத்தோருக்கு பிடிக்கவில்லை. இருவரும் அவர்களது காதலுக்கு கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.
இந்த நிலையில் கடந்த 11-ந்தேதி காசியாபாத்தில் உள்ள ஆர்ய சமாஜ் மந்திரில் நேஹா எதிர்ப்புகளை மீறி சூரஜை திருமணம் செய்து கொண்டார். இதையடுத்து நேஹாவின் தந்தை மற்றும் சகோதரர் இருவரும் நேஹாவைப் பிடித்து வந்து கடந்த 12-ந்தேதி ஆணவக் கொலை செய்தனர். அவரது உடலை எரித்து ஆதாரங்களை அழிக்க முயன்றுள்ளனர்.
இதுகுறித்து தகவல் அறிந்த போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து விசாரணை மேற்கொண்டனர். இதில் அவர்கள் இருவரும் நேஹாவை ஆணவக் கொலை செய்தது தெரிய வந்தது. இதைத் தொடர்ந்து பானு ரத்தோர், ஹிமான்ஷு ரத்தோர் இருவரையும் போலீசார் கைது செய்தனர். மேலும் இது தொடர்பாக விரிவான விசாரணை நடத்தி வருகின்றனர்.
வேறு சாதி இளைஞரை திருமணம் செய்த இளம்பெண்ணை தந்தை மற்றும் சகோதரர் ஆணவக் கொலை செய்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.