

லக்னோ,
உலகம் முழுவதும் காதலர் தினம் இன்று கொண்டாடப்பட்டு வருகிறது. இந்த காதலர் தினத்தில் உத்தரபிரதேசத்தில் சுவாரசிய நிகழ்வு நடந்துள்ளது.
உத்தரபிரதேசத்தின் ஹம்பூர் மாவட்டம் மீரட்டை சேர்ந்த இளைஞருக்கு கடந்த சில ஆண்டுகளுக்குமுன் திருமணம் நடைபெற்றது. அதேவேளை, அந்த இளைஞரின் மனைவிக்கும் அதே பகுதியை சேர்ந்த மற்றொரு இளைஞருக்கும் இடையே பழக்கம் ஏற்பட்டுள்ளது. இது நாளடைவில் கள்ளக்காதலாக மாறியுள்ளது.
இந்நிலையில், காதலர் தினமான இன்று அந்த இளம்பெண் தனது கள்ளக்காதலனுடன் பைக்கில் சென்றுள்ளார். மீரட் மேம்பாலம் அருகே இருவரும் பைக்கில் சென்றபோது இளம்பெண்ணின் கணவன் இதை கண்டுள்ளார்.
இதையடுத்து, இருவரையும் விரட்டி சென்ற அவர் மீரட் மேம்பாலத்தில் வைத்து மடக்கிப்பிடித்தார். அப்போது, மனைவியின் கள்ளக்காதலனுக்கும், இளைஞருக்கும் இடையே நடுரோட்டில் வாக்குவாதம் ஏற்பட்டது.
வாக்குவாதம் முற்றிய நிலையில் கைகலப்பு ஏற்பட்டது. இளம்பெண்ணின் கணவனும், அவரின் கள்ளக்காதலனும் ஒருவரை ஒருவர் சரமாரியாக தாக்கினர். இதனால், வாகனங்களில் சென்றவர்கள் இருவரையும் சமாதானப்படுத்த முயற்சித்தனர்.
ஆனாலும், தொடர்ந்து சண்டையிட்டதால் உடனடியாக போலீசாருக்கு தகவல் கொடுக்கப்பட்டது. தகவலறிந்து விரைந்து சென்ற போலீசார் இளம்பெண், அவரின் கணவன், கள்ளக்காதலன் ஆகிய 3 பேரையும் போலீஸ் நிலையத்திற்கு அழைத்து சென்று விசாரணை நடத்தினர். பின்னர், 3 பேரையும் எச்சரித்து அனுப்பினர். இந்த சம்பவம் தொடர்பான வீடியோ சமூகவலைதளத்தில் வைரலாகி வருகிறது.