'பிரைடு சிக்கன்' வாங்க பணம் தராததால் ஆத்திரம்: மனைவியை குத்திக் கொன்ற கணவன் - அதிர்ச்சி சம்பவம்

சிக்கன் வாங்க பணம் தர மறுத்த நிலையில் இருவருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது.
கோப்புப்படம் 
கோப்புப்படம் 
Published on

காசியாபாத்,

உத்தரப் பிரதேசத்தில் 'பிரைடு சிக்கன்' (Fried Chicken) வாங்க பணம் தராததால் ஆத்திரமடைந்த கணவன் கத்தரிக்கோலால் மனைவியை குத்திக் கொன்ற சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. காசியாபாத்தில் உள்ள பிரேம் நகர் காலனியில் இந்த சம்பவம் நடந்துள்ளது.

பிரேம் நகர் காலனி பகுதியில் வசித்து வருபவர் ஷாஹித் ஹுசைன். அவர் தையல்காரராக வேலை செய்து வருகிறார். அவரது மனைவி நூர் பானோ (46 வயது). இந்த நிலையில் வெள்ளிக்கிழமை இரவு ஹுசைன், சந்தையில் இருந்து பிரைடு சிக்கன் வாங்குவதற்காக பானோவிடம் பணம் கேட்டுள்ளார். பானோ பணம் தர மறுத்த நிலையில் இருவருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது.

பின்னர் சில நிமிடங்களுக்குப் பிறகு பானோ, வெளியே சென்று சிக்கன் வாங்கி வந்துள்ளார். இருப்பினும், இருவருக்கும் இடையே தகராறு தொடர்ந்தது. ஒரு கட்டத்தில் ஹுசைன், கத்தரிக்கோலால் பானோவின் கழுத்தில் குத்தியுள்ளார். இதையடுத்து உடனடியாக மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்ட பானோ, அங்கு உயிரிழந்தார். அவர்களின் குழந்தைகள் முன்னிலையில் இந்த சம்பவம் நடந்துள்ளது.

இது தொடர்பாக வழக்குப்பதிவு செய்துள்ள போலீசார், ஹுசைனை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

X

logo
Daily Thanthi
www.dailythanthi.com