

மீரட்,
வெள்ளிக்கிழமை அன்று உத்திரபிரதேச மாநிலத்தில் மீரட் மாவட்டத்தில் நடந்த ஒரு திருட்டு சம்பவத்தின் போது, புதிதாக திருமணம் செய்த பெண் ஒருவர் சில அடையாளம் தெரியாத மர்ம நபர்களால் சுட்டுக் கொல்லப்பட்டார்.
இந்த வழக்கு விசாரணை குறித்து போலீசார் தெரிவிக்கையில், "நாங்கள் இந்த வழக்கை பதிவு செய்து விசாரணைநடத்தி வருகிறோம். எங்களுக்கு கிடைத்த தகவலின் படி, இந்த சம்பவத்தில் 3-4 நபர்களுக்கு தொடர்பு உள்ளது என தெரிய வந்துள்ளது. இது ஒரு கொள்ளை வழக்கு. ஆனால் அது பற்றி இன்னும் தெளிவாக தெரிவிக்க முடியாது. உறுதியான தகவல் விரைவில் வெளிவரும், '' என மூத்த போலீஸ் அதிகாரி மன்சில் சைனி கூறினார்.
முன்னதாக, புதுமணத் தம்பதிகள் வந்த காரை தடுத்து நிறுத்திய மர்மநபர்கள், அதிலிருந்த மணப்பெண்ணை கொன்று விட்டு சுமார் ரூ. 6 லட்சம் மதிப்புள்ள உடைமைகளை கொள்ளையடித்துச் சென்றனர். உடனடியாக செயல்பட்ட அவர்களது உறவினர்கள் காயமடைந்த பெண் மற்றும் அவரது கணவரை அருகிலுள்ள மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். ஆனால் ஏற்கனவே அந்தப் பெண் இறந்துவிட்டதாக டாக்டர்கள் தெரிவித்தனர். இந்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
இந்த சம்பவம் தொடர்பாக போலீசார் தீவிர விசாரணையில் ஈடுபட்டு வருகிறார்கள் என தகவல்கள் தெரிவிக்கின்றன.