வெனிசுலாவில் அமெரிக்க ஏகாதிபத்தியம் ஊடுருவியுள்ளது: கேரள முதல்-மந்திரி கண்டனம்

அமெரிக்க ராணுவ நடவடிக்கையானது, பிற நாடுகளில் அத்துமீறி தலையிடும் அதன் நீண்டகால வரலாற்றை பிரதிபலிக்கிறது.
வெனிசுலாவில் அமெரிக்க ஏகாதிபத்தியம் ஊடுருவியுள்ளது: கேரள முதல்-மந்திரி கண்டனம்
Published on

திருவனந்தபுரம்,

வெனிசுலா அதிபர் நிக்கோலஸ் மதுரோ ஒரு போதை பொருள் பயங்கரவாதி என்றும் அந்நாட்டில் இருந்து அமெரிக்காவுக்குள் அபாயகர போதை பொருட்கள் கடத்தப்படுகின்றன என்றும் டிரம்ப் கடுமையான குற்றச்சாட்டுகளை கூறி வந்த நிலையில், நிக்கோலஸ் மதுரோவும், அவருடைய மனைவி சிலியா புளோரசும் அமெரிக்க ராணுவ வீரர்களால் கைது செய்யப்பட்டு வெனிசுலாவில் இருந்து நாடு கடத்தப்பட்டனர்.

இதனை தொடர்ந்து, நிக்கோலஸ், அவருடைய மனைவி புளோரஸ் மீது நியூயார்க் நகரில் குற்றச்சாட்டு பதிவு செய்யப்பட்டு உள்ளது. அவர்கள் விரைவில் அமெரிக்க கோர்ட்டுகளில், அமெரிக்க மண்ணில், அமெரிக்க நீதியை பெறுவார்கள் என அமெரிக்க அட்டர்னி ஜெனரல் பமீலா போண்டி கூறினார்.

இது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. எனினும், வெனிசுலாவில் உள்ள எண்ணெய் மற்றும் பிற வளங்களை குறி வைத்து அமெரிக்கா இந்த நடவடிக்கையில் ஈடுபட்டு உள்ளது என உலக நாடுகளால் பார்க்கப்படுகிறது.

இதற்கு, ரஷியா மற்றும் ஈரான் போன்ற நாடுகள் கடும் கண்டனம் தெரிவித்து உள்ளன. இந்திய அரசு இதற்கு கவலை தெரிவித்துள்ளது. நிலைமையை கவனித்து வருவதுடன், வெனிசுலா மக்களின் நலனுக்கான ஆதரவை மீண்டும் வலியுறுத்துகிறோம் என்றும் தெரிவித்து உள்ளது. சீனா, ஜப்பான் நாடுகளும், ஐ.நா. அமைப்பும் கூட வெனிசுலாவுக்கு ஆதரவாக பேசியுள்ளன.

இந்நிலையில், கேரள முதல்-மந்திரி பினராயி விஜயன் இன்று கூறும்போது, அமெரிக்க அரசு ஏகாதிபத்திய ஆணவத்துடன் நடந்து கொள்கிறது. வெனிசுலாவின் பிராந்திய ஒருமைப்பாட்டை கவனத்தில் கொள்ளாமல் நடந்து கொண்டு, அதன் தலைவரை சிறைபிடித்து வைத்துள்ளது என குற்றச்சாட்டாக கூறினார்.

அமெரிக்க ராணுவ நடவடிக்கையானது, பிற நாடுகளில் அத்துமீறி தலையிடும் அதன் நீண்டகால வரலாற்றை பிரதிபலிக்கிறது. அமெரிக்காவின் பொருளாதார மற்றும் அரசியல் நலனிற்காக, அவற்றை பாதுகாப்பதற்காக, மோதல்களை உருவாக்கி, லட்சக்கணக்கான அப்பாவி மக்களை கடந்த காலங்களில் கொன்று குவித்துள்ளது என்றும் கூறியுள்ளார்.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com