உத்தரபிரதேசம்: எக்ஸ்பிரஸ் ரெயில் தடம்புரண்டு 7 பேர் சாவு; 30 பேர் காயம் - பிரதமர் மோடி இரங்கல்

உத்தரபிரதேசத்தில் எக்ஸ்பிரஸ் ரெயில் தடம்புரண்டு 7 பேர் உயிரிழந்தனர், சுமார் 30 பேர் காயமடைந்தனர். உயிரிழந்தோரின் குடும்பத்துக்கு பிரதமர் மோடி இரங்கல் தெரிவித்து உள்ளார்.
உத்தரபிரதேசம்: எக்ஸ்பிரஸ் ரெயில் தடம்புரண்டு 7 பேர் சாவு; 30 பேர் காயம் - பிரதமர் மோடி இரங்கல்
Published on

லக்னோ,

மேற்கு வங்காளத்தின் மால்டாவில் இருந்து டெல்லிக்கு, நியூ பரக்கா எக்ஸ்பிரஸ் ரெயில் இயக்கப்படுகிறது. இந்த ரெயில் நேற்று அதிகாலையில் உத்தரபிரதேசத்தின் ரேபரேலி மாவட்டத்தில் வந்து கொண்டிருந்தது.

அங்குள்ள ஹர்சந்த்பூர் பகுதியில் 6.10 மணியளவில் வந்த போது திடீரென ரெயிலின் என்ஜின் மற்றும் 9 பெட்டிகள் தண்டவாளத்தை விட்டு கீழிறங்கி விபத்துக்குள்ளாயின. இதில் பெட்டிகள் ஒன்றுடன் ஒன்று மோதி பலத்த சேதமடைந்தன. இந்த இடிபாடுகளில் சிக்கிய பயணிகள் மரண ஓலமிட்டனர்.

இந்த சம்பவத்தில் 7 பயணிகள் பரிதாபமாக உயிரிழந்தனர். சுமார் 30 பயணிகள் காயமடைந் தனர். இதில் 9 பேரின் நிலைமை கவலைக்கிடமாக உள்ளது. எனவே உயிரிழப்புகள் மேலும் அதிகரிக்கும் என தெரிகிறது.

ரெயில் தடம்புரண்டு விபத்துக்குள்ளான தகவல் அறிந்ததும் உத்தரபிரதேச போலீசார், தீயணைப்பு வீரர்கள் மற்றும் பேரிடர் மீட்புக்குழுவினர் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று மீட்புப்பணிகளில் இறங்கினர். அவர்கள் காயமடைந்தவர்களை மீட்டு அருகில் சுகாதார நிலையம் மற்றும் மாவட்ட மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

மேலும் ரெயிலில் இருந்த பிற பயணிகள் மீட்கப்பட்டு சிறப்பு பஸ்கள் மூலம் லக்னோவுக்கு அனுப்பி வைக்கப்பட்டனர். பின்னர் அங்கிருந்து சிறப்பு ரெயில் மூலம் அவர்கள் டெல்லிக்கு அனுப்பி வைக்கப்பட்டனர். இந்த விபத்து காரணமாக அந்த பகுதியில் ரெயில் சேவை பாதிக்கப்பட்டது.

இந்த விபத்துக்கான காரணம் குறித்து உடனடியாக தெரியவில்லை. இது குறித்து விசாரணை நடத்துமாறு உயர்மட்ட விசாரணைக்கு ரெயில்வே மந்திரி பியூஷ் கோயல் உத்தரவிட்டு உள்ளார். இந்த விபத்தின் பின்னணியில் பயங்கரவாத சதி உள்ளதா? என்றும் விசாரிக்கப்படும் என அவர் கூறினார்.

ரெயில் தடம்புரண்ட விபத்து குறித்து தகவல் அறிந்த பிரதமர் மோடி, விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்துக்கு ஆழ்ந்த இரங்கல் வெளியிட்டார். இதைப்போல ரெயில்வே மந்திரியும் தனது டுவிட்டர் தளத்தில் இரங்கல் வெளியிட்டு இருந்தார்.

இந்த விபத்தில் உயிரிழந்தோரின் குடும்பத்துக்கு ரூ.5 லட்சம் இழப்பீடு வழங்கப்படும் எனக்கூறிய அவர், படுகாயமடைந்தவர்களுக்கு ரூ.1 லட்சமும், லேசான காயமடைந்தவர்களுக்கு ரூ.50 ஆயிரமும் நிதியுதவியும் அறிவித்தார்.

இதைப்போல உத்தரபிரதேச அரசும் உயிரிழந்தோரின் குடும்பத்துக்கு ரூ.2 லட்சம் இழப்பீடு அறிவித்து உள்ளது. மேலும் காயமடைந்தவர்களுக்கு ரூ.50 ஆயிரம் நிதியுதவியும் அறிவித்த முதல்-மந்திரி யோகி ஆதித்யநாத், சம்பவ இடத்தில் மீட்பு பணிகளை துரிதமாக மேற்கொள்ளுமாறு அனைத்து துறை அதிகாரிகளுக்கும் உத்தரவிட்டார்.

இந்த ரெயில் விபத்தால் ரேபரேலி மாவட்டத்தில் நேற்று அதிகாலையில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com