

லக்னோ,
உத்தரபிரதேசத்தில் நடைபெற்ற சாலை விபத்தில் பிரபல நாட்டுப்புற பாடகர் உயிரிழந்தார்.
உத்தரபிரதேச மாநிலம் ஆக்ரா மாவட்டம் மிடாகர் கிராமத்தை சேர்ந்த பிரபல நாட்டுப்புற பாடகர் ரிங்கு ராஜ்வாடா (வயது 31). இவர் அப்பகுதியில் உள்ள பல்வேறு கோவில் விழாக்களில் ஆன்மிக நாட்டுப்புற பாடல்கள் பாடி புகழ்பெற்றார்.
இந்நிலையில், ரிங்கு ராஜ்வாடா நேற்று மதுரா மாவட்டம் பராலியில் இருந்து பராக் நகருக்கு பைக்கில் சென்றுகொண்டிருந்தார். நெடுஞ்சாலையில் பல்தேவ் பகுதியில் சென்றபோது அடையாளம் தெரியாத வாகனம் ரிங்குவின் பைக் மீது மோதியது.
இந்த கோர விபத்தில் படுகாயமடைந்த ரிங்கு ராஜ்வாடாவை மீட்ட அக்கம்பக்கத்தினர் அவரை அருகில் உள்ள மருத்துவமனையில் அனுமதித்தனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்ட நிலையில் ரிங்கு சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இந்த சம்பவம் தொடர்பாக வழக்குப்பதிவு செய்த போலீசார், விபத்தை ஏற்படுத்திவிட்டு தப்பிச்சென்ற வாகனத்தையும் அதன் டிரைவரையும் தீவிரமாக தேடி வருகின்றனர்.