

லக்னோ,
ராஜஸ்தான் மாநிலம் சரு எனும் பகுதியைச் சேர்ந்தவன் அம்ஜத்கான். இவனுக்கு திருமணமாகி 2 குழந்தைகள் உள்ளனர்.
சமூக வலைத்தளம் மூலம் இவன் சிரியாவில் உள்ள ஐ.எஸ். தீவிரவாதிகளுடன் தொடர்பு ஏற்படுத்தி கொண்டு பழகி வந்தான். நாளடைவில் அவன் சிரியாவில் உள்ள ஷபி அர்மர் என்பவன் வழி காட்டுதலில் செயல்படும் ஐ.எஸ். தீவிரவாதியாக மாறினான்.
இந்தியாவில் உள்ள முஸ்லிம் இளைஞர்களை ஐ.எஸ். தீவிரவாத இயக்கத்தின் ஆதரவாளர்களாக மாற்றும் பொறுப்பு அம்ஜத்கானிடம் வழங்கப்பட்டது. இதையடுத்து அம்ஜத்கானுக்கும் நாடெங்கும் உள்ள பல்வேறு இளைஞர்களுக்கும் தொடர்பு ஏற்பட்டது.
உத்தரபிரதேச மாநிலம் அசம்கர் மாவட்டத்தில் உள்ள மருத்துவ மாணவி ஒருவருக்கும் அம்ஜத்கானுக்கும் தொடர்பு ஏற்பட்டது. அம்ஜத்கானுடன் அந்த மாணவி இஸ்லாம் பற்றி பல தடவை விவாதித்தார். அவர்களது இந்த உரையாடல் காதலாக மாறியது.
சமீபத்தில் அம்ஜத்கானை, அந்த மருத்துவ மாணவி போனில் திருமணம் செய்து கொண்டார். இது பற்றிய தகவலை உளவுத் துறையினர் கண்டு பிடித்தனர். இதைத் தொடர்ந்து அந்த மாணவியை போலீசார் கண்காணித்து வருகிறார்கள்.
தற்போது அந்த மாணவியை காணவில்லை. அவரை போலீசார் தேடி வருகிறார்கள். உரிய நேரத்தில் அவரை கைது செய்ய போலீசார் முடிவு செய்துள்ளனர். அந்த மாணவியின் பெற்றோருக்கு இது கடும் அதிர்ச்சியைக் கொடுத்துள்ளது. தங்கள் மகள் தீவிரவாதியுடன் பழகியது பற்றி தெரியாது என்று அந்த மாணவியின் பெற்றோர் கூறினார்கள்.