உத்தர பிரதேசம்: நகை வாங்குவது போல் நடித்து ரூ.8 லட்சம் மதிப்பிலான பொருட்களை வாய்க்குள் வைத்து கடத்திச் சென்ற பெண்கள்

தலைமறைவாக உள்ள 4 நபர்களை போலீசார் தீவிரமாக தேடி வருகின்றனர்.
உத்தர பிரதேசம்: நகை வாங்குவது போல் நடித்து ரூ.8 லட்சம் மதிப்பிலான பொருட்களை வாய்க்குள் வைத்து கடத்திச் சென்ற பெண்கள்
Published on

லக்னோ,

உத்தர பிரதேச மாநிலம் பிஜ்னோர் மாவட்டம் சந்த்பூரில் உள்ள ஒரு நகைக்கடைக்கு 5 பெண்கள் மற்றும் ஒரு ஆண் ஆகியோர் கும்பலாக சென்றுள்ளனர். அவர்களிடம் கடை ஊழியர்கள் நகைகளை காண்பித்துக் கொண்டிருந்தனர். திருமண நிகழ்ச்சிக்காக நகைகளை பார்க்க வேண்டும் எனக் கூறி, கடை ஊழியர்களிடம் தொடர்ந்து பேசியபடியே நகைகளை எடுத்துப் பார்த்துள்ளனர்.

பின்னர் அவர்கள் அங்கிருந்து நகை எதுவும் வாங்காமல் கிளம்பிச் சென்ற நிலையில், சில நகைகள் காணாமல் போனதைக் கண்டு அதிர்ச்சியடைந்த ஊழியர்கள் கடையில் இருந்த சி.சி.டி.வி. கேமரா காட்சிகளை ஆய்வு செய்தனர். அப்போது, கடைக்கு வந்த பெண்கள் தங்கள் வாய்க்குள் நகைகளை மறைத்து வைத்தது தெரியவந்தது. அவர்கள் சுமார் ரூ.8 லட்சம் மதிப்பிலான நகைகளை திருடிச் சென்றிருந்தனர்.

இதையடுத்து கடை உரிமையாளர் இது குறித்து போலீசில் புகார் அளித்தார். இது தொடர்பாக வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்திய போலீசார், நகைகளை திருடிச் சென்ற கும்பலை காசியாபாத் பகுதியில் இருப்பதை கண்டறிந்தனர். பின்னர் அங்கு சென்ற போலீசார் ஜாஹிதா மற்றும் ஆஷியா ஆகிய 2 பெண்களை கைது செய்தனர். மேலும் இந்த திருட்டில் தொடர்புடைய 4 பேர் தலைமறைவாக உள்ள நிலையில், அவர்களை போலீசார் தீவிரமாக தேடி வருகின்றனர்.

இந்த கும்பல் ஏற்கனவே தாம்பூரிலும் இதே போன்ற நகைத்திருட்டில் ஈடுபட்டதாகவும், பிற மாவட்டங்கள் மற்றும் மாநிலங்களிலும் இதுபோன்ற சம்பவங்களை அரங்கேற்றியிருக்கலாம் என்றும் போலீசார் சந்தேகிக்கின்றனர். தற்போது கைது செய்யப்பட்டவர்களிடம் இருந்து 3 ஜோடி தங்க காதணிகள், 4 ஜோடி வெள்ளிப் பொருட்கள் மற்றும் தப்பிச் செல்வதற்கு பயன்படுத்தப்பட்ட 2 கார்கள் ஆகியவை பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாக போலீசார் தெரிவித்துள்ளனர்.

X

Daily Thanthi
www.dailythanthi.com