

லக்னோ,
உத்தர பிரதேச மாநிலம் கவுஷம்பி மாவட்டத்தை சேர்ந்த ஷிவ் பிரசாத்(வயது 19) என்ற இளைஞர், அருகில் உள்ள மகுவா கதா என்ற கிராமத்தில் வசிக்கும் தனது பெண் தோழியை பார்ப்பதற்காக நேற்று மாலை தனது வீட்டில் இருந்து புறப்பட்டுச் சென்றுள்ளார். அவர் இரவு 7 மணியளவில் வீட்டிற்கு வருவதாக கூறிவிட்டுச் சென்றுள்ளார்.
ஆனால் ஷிவ் பிரசாத்தின் செல்போனில் இருந்து அவரது தாய்க்கு அழைப்பு வந்துள்ளது. அதில் பேசிய ஷிவ் பிரசாத், ‘அம்மா என்னை காப்பாற்றுங்கள், என்னை கொலை செய்யப்போகிறார்கள்’ என்று பதற்றமாக கூறியுள்ளார். இதனால் அதிர்ச்சியடைந்த அவரது தாய், தனது உறவினர்களை அழைத்துக் கொண்டு பக்கத்து கிராமத்திற்கு சென்றார்.
அவர்கள் அங்கு சென்று பார்த்தபோது ஷிவ் பிரசாத் உடலில் பலத்த காயங்களுடன் உயிருக்கு போராடிய நிலையில் இருந்தார். அவரை மீட்டு உடனடியாக மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். ஆனால் மருத்துவமனையில் சிகிச்சை பலனின்றி ஷிவ் பிரசாத் உயிரிழந்தார். இந்த சம்பவம் தொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணையை தொடங்கியுள்ளனர்.
உயிரிழந்த ஷிவ் பிரசாத்தின் தலையில் பலத்த காயங்கள் இருந்துள்ளன. அவரது தாயார் போலீசாரிடம் ஷிவ் பிரசாத்தின் பெண் தோழியின் குடும்பத்தினர்தான் தனது மகனை அடித்து கொலை செய்துவிட்டதாக கூறியுள்ளார். தன்னிடம் போனில் பேசும்போது அவர்களது பெயர்களை தனது மகன் கூறியதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார். அவர் அளித்த புகாரின் அடிப்படையில் போலீசார் வழக்குப்பதிவு செய்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.