

புதுடெல்லி,
கடந்த 2009ம் ஆண்டு ஜூலை 3ந்தேதி ரன்பீர் சிங் என்ற 22 வயது எம்.பி.ஏ. மாணவர் போலி என்கவுண்டரில் போலீசாரால் சுட்டு கொல்லப்பட்டார். அவரது உடலில் 29 குண்டுகள் துளைத்திருந்தன. ஊடகங்கள் மற்றும் பிரேத பரிசோதனை அறிக்கை ஆகியவற்றின் தகவல் அடிப்படையில் இது போலியான என்கவுண்டர் என குற்றச்சாட்டு எழுந்தது.
இந்த வழக்கில் 7 போலீசாரை குற்றவாளிகள் என கடந்த 2014ம் ஆண்டு ஜூன் 9ந்தேதி விசாரணை நீதிமன்றம் அறிவித்து தீர்ப்பு விதித்தது.
இதனையடுத்து மேல்முறையீடு செய்த போலீசார், உத்தர பிரதேசத்தின் காசியாபாத் நகரை சேர்ந்த ரன்பீர் சிங் டேராடூன் நகருக்கு 2 பேருடன் சென்றுள்ளார். அவர்கள் கொள்ளை சம்பவத்தில் ஈடுபட்டதுடன், தங்களது போலீசாரில் ஒருவரிடம் இருந்து பணி பாதுகாப்பிற்காக வைத்திருந்த துப்பாக்கியை பறித்தனர் என மனுவில் தெரிவித்துள்ளனர்.
குற்றச்சாட்டு தெரிவிக்கப்பட்ட போலீசார் அனைவரும் அப்பொழுது ஜனாதிபதியாக இருந்த பிரதீபா பாட்டீல் வருகைக்காக பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு இருந்தனர்.
சி.பி.ஐ. தனது தரப்பில், 2009ம் ஆண்டு ஜூலை 3ந்தேதி டேராடூன் நகருக்கு வேலை ஒன்றிற்காக ரன்பீர் சிங் சென்றுள்ளார் என நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளது. குற்றவாளிகள் தெரிவித்துள்ளது ஒரு கதை என்றும் தெரிவித்து இருந்தது.
இந்நிலையில், இந்த வழக்கு டெல்லி உயர் நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தது. இதனை எஸ். முரளிதர் மற்றும் ஐ.எஸ். மேத்தா அமர்வு விசாரித்தது. விசாரணை நீதிமன்றத்தின் தீர்ப்பினை உறுதி செய்த உயர் நீதிமன்றம் 7 போலீசாருக்கு ஆயுள் தண்டனை விதித்தது. 10 போலீசாரை விடுதலை செய்து உத்தரவிட்டது.