

டேராடூன்,
உத்தரகாண்ட் மாநிலம் சமோலி மாவட்டத்தில் இருந்த நந்தா தேவி பனிப்பாறை கடந்த 7-ந் தேதி உடைந்து அலெக்நந்தா, தாலிகங்கா ஆறுகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. கரையோர மக்கள் வெள்ளத்தில் அடித்து செல்லப்பட்டனர். அங்கிருந்த அனல், நீர்மின் நிலையங்கள் பெருத்த சேதம் அடைந்தன.
தபோவன் நீர்மின் நிலைய சுரங்கம், சேறு மற்றும் இடிபாடுகளால் மூடிக்கொண்டது. உள்ளே வேலை செய்து கொண்டிருந்த 25 முதல் 30 தொழிலாளர்கள் சிக்கிக்கொண்டனர். அவர்களையும், வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்டவர்களையும் மீட்கும் பணி, இன்று 7-வது நாளாக தொடர்ந்து நடைபெற்று வருகிறது.
மீட்புப் பணிகள் நடைபெற்று வரும் இடங்களில் தண்ணீர் வரத்து அதிகரித்து வருவதால், அப்பகுதிகளில் குறைந்த எண்ணிக்கையிலான வீரர்களுடன் மீட்புப் பணிகள் நடைபெற்று வருகிறது.
இதுவரை 38 பேரின் உடல்கள் மீட்கப்பட்டுள்ளதாக காவல்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. பாதிக்கப்பட்ட மக்களுக்கு தொடர்ந்து நிவாரணப் பொருள்கள் வழங்கப்பட்டு வருகின்றன.
பாலம் சேதமடைந்த பகுதிகளில் தற்காலிகமாக பாலம் அமைக்கும் பணிகளில் இந்தோ-திபெத் எல்லை பாதுகாப்புப் படையினர் ஈடுபட்டுள்ளனர்.