உத்தரகாண்ட்: சுற்றுலா தலத்தில் திடீர் மேகவெடிப்பு, கனமழை; 13 பேர் பலி

ஆசன் ஆற்றில் ஏற்பட்ட கடுமையான வெள்ளப்பெருக்கில் சிக்கி, டிராக்டர் நீரில் அடித்து செல்லப்பட்டு 5 தொழிலாளர்கள் பலியானார்கள்.
உத்தரகாண்ட்: சுற்றுலா தலத்தில் திடீர் மேகவெடிப்பு, கனமழை; 13 பேர் பலி
Published on

டேராடூன்,

உத்தரகாண்டின் டேராடூன் நகர் மற்றும் அருகேயுள்ள இடங்களில் இன்று காலை திடீரென கனமழையும், மேகவெடிப்பும் ஏற்பட்டது. இதில், கார்வால் பகுதியில் பெய்த தொடர் மழையால், சாலைகள், பாலங்கள், ஓட்டல்கள் மற்றும் கடைகள் என பரவலாக சேதம் அடைந்தன. பல்வேறு மாவட்டங்களில் வாகன போக்குவரத்தும் தடைபட்டது.

டேராடூன் அருகே சஹஸ்திரதரா என்ற புகழ் பெற்ற சுற்றுலா தலத்தில் திடீரென்று மேகவெடிப்பு ஏற்பட்டது. இதனால், கடைகளும், ஓட்டல்களும் பாதிப்படைந்தன. கார்லிகட் மற்றும் மஜ்ஜியார் கிராமங்களில் நிலச்சரிவும் சேர்ந்து ஏற்பட்டதில் பலர் சிக்கி கொண்டனர்.

ஆசன் ஆற்றில் கடுமையான வெள்ளப்பெருக்கு ஏற்பட்டதில் டிராக்டர் நீரில் அடித்து செல்லப்பட்டது. இதில் சிக்கி 5 தொழிலாளர்கள் பலியானார்கள். தொழிலாளர்கள் 8 பேர் காணாமல் போயுள்ளனர்.

அவர்களை தேடும் பணியும் நடந்து வருகிறது. இளைஞர் ஒருவர் மீது பாறாங்கல் உருண்டு விழுந்ததில், ஸ்கூட்டருடன் சேர்ந்து நசுங்கி அவர் பலியானார். நிலச்சரிவில் ஒருவரும், டான்ஸ் ஆற்றின் வெள்ளத்தில் 3 பேரும் சிக்கி பலியானார்கள்.

கனமழையால், வகுப்பறை சுவர் இடிந்து விழுந்ததில் கைப் என்ற மாணவர் பலியானார். இதுபோன்று உத்தரகாண்டில் திடீர் மேகவெடிப்பு, கனமழை மற்றும் நிலச்சரிவில் சிக்கி மொத்தம் 13 பேர் வரை பலியாகி உள்ளனர்.

X

Daily Thanthi
www.dailythanthi.com