

புதுடெல்லி,
இந்தியாவில் கொரோனா தொற்றின் 2வது அலை மிகத் தீவிரமாக பரவி வருகிறது. இதனை கட்டுப்படுத்த மத்திய, மாநில அரசுகள் பல்வேறு பாதுகாப்பு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றன. பல மாநிலங்களில் பகுதி நேர ஊரடங்கு உள்ளிட கட்டுப்பாட்டு விதிகள் அமல்படுத்தப்பட்டுள்ளன.
இந்நிலையில் ஊரடங்கு கட்டுப்பாடுகளால், கொரோனா தடுப்பூசி செலுத்தும் நடவடிக்கைகள் பாதிக்கப்படக்கூடாது என, மாநில அரசுகளுக்கு மத்திய அரசு அறிவுறுத்தி உள்ளது. இது குறித்து அனைத்து மாநில மற்றும் யூனிய பிரதேச அரசுகளுக்கும், மத்திய அரசு அனுப்பிய சுற்றறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது;-
கொரோனா வைரஸ் பரவலை தடுக்க, பல மாநிலங்களில், ஊரடங்கு போன்ற பல கட்டுப்பாடுகள் மக்களுக்கு விதிக்கப்பட்டுள்ளன. எனினும், இந்த கட்டுப்பாடுகளால், கொரோனா தடுப்பூசி செலுத்தும் நடவடிக்கைகள் பாதிக்கப்படக்கூடாது. தடுப்பூசி மையத்திற்கு மக்கள் சென்று வருவதற்கு எந்த தடையும் இருக்கக்கூடாது.
கொரோனா பரவுவதை தவிர்க்கும் வகையில், மருத்துவமனையின் தனி கட்டடத்தில் தடுப்பூசி மையம் இருக்கவேண்டும். அதை, அதிகாரிகள் உறுதிசெய்யவேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.