

நாட்டில் பல்வேறு நகரங்களுக்கு இடையே இருக்கை வசதி கொண்ட வந்தே பாரத் ரெயில்கள் இயக்கப்பட்டு வந்த நிலையில், தற்போது படுக்கை வசதி கொண்ட (ஸ்லீப்பர்) வந்தே பாரத் ரெயில்கள் இயக்க மத்திய அரசு நடவடிக்கை எடுத்து வருகிறது.
மேற்கு வங்காள மாநிலம் ஹவுரா, அசாம் மாநிலம் காமக்யா இடையே படுக்கை வசதி கொண்ட முதல் வந்தே பாரத் ரெயில் சேவை தொடங்கப்பட்டுள்ளது. கடந்த ஜனவரி மாதம் 17-ந்தேதி இந்த சேவையை பிரதமர் மோடி தொடங்கி வைத்தார்.இந்த நிலையில் 2-வது வந்தே பாரத் ஸ்லீப்பர் ரெயில் சேவையை மும்பை-பெங்களூரு இடையே இயக்க மத்திய அரசு ஒப்புதல் வழங்கி உள்ளது.
நாட்டின் முக்கியமான நகரங்களான மும்பை மற்றும் பெங்களூருவை இணைக்கும் வகையில் வந்தே பாரத் ஸ்லீப்பர் ரெயில்களை இயக்க மத்திய அரசு முடிவு செய்துள்ளது. மும்பை சி.எஸ்.எம்.டி.- கே.எஸ்.ஆர். பெங்களூரு (சிட்டி) இடையே இந்த வந்தே பாரத் ஸ்லீப்பர் ரெயில் இயக்கப்பட உள்ளது.தற்போது மும்பை-பெங்களூரு இடையே 1,136 கிலோ மீட்டர் தூரத்தை எக்ஸ்பிரஸ் ரெயில்கள் 24 மணி நேரத்தில் கடக்கிறது. வந்தே பாரத் ஸ்லீப்பர் ரெயில் சேவை அறிமுகமானால் பயண நேரம் 16-18 மணி நேரமாகக் குறைவதுடன் பயணிகளுக்கு சொகுசான சேவையை வழங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது