5 வயது சிறுவனின் மர்ம உறுப்பில் சூடு வைத்த ஆசிரியர்

அந்தரங்க உறுப்பில் கொப்புளம் ஏற்பட்டு கருகியிருந்ததை கண்டு தாய் அதிர்ச்சியில் உறைந்தார்.
5 வயது சிறுவனின் மர்ம உறுப்பில் சூடு வைத்த ஆசிரியர்
Published on

லக்னோ,

உத்தரபிரதேச மாநிலம் வாரணாசி அருகே, 5 வயது மழலையர் பள்ளி சிறுவன் ஒருவனுக்கு ஆசிரியை செய்த அக்கிரமம் ஒட்டுமொத்த நாட்டையும் உலுக்கியுள்ளது. வாரணாசியின் பண்டேபூர் பகுதியில் உள்ள ‘செரீன் சோனி ப்ளே ஸ்கூல்’ என்ற தனியார் பள்ளியில் இந்த நெஞ்சைப் பதறவைக்கும் கொடூரம் அரங்கேறியுள்ளது.

சிறுநீர் கழிக்க அனுமதி கேட்டுள்ளான்

அப்பகுதியை சேர்ந்த வழக்கறிஞர் ஒருவரின் 5 வயது மகன், அந்த பள்ளியில் நர்சரி படித்து வருகிறான். சம்பவத்தன்று வகுப்பறையில் இருந்த சிறுவன், தனக்கு சிறுநீர் வருவதாக கூறி ஆசிரியை பிரித்தியிடம் அனுமதி கேட்டுள்ளான். ஆனால், அந்த ஆசிரியை சிறுவனை கழிவறைக்கு செல்ல அனுமதிக்காமல் மறுத்ததாகக் கூறப்படுகிறது.

அந்தரங்க உறுப்பில் சூடு

சிறு குழந்தையான அச்சிறுவனால் சிறுநீரை அடக்க முடியாமல், தான் அணிந்திருந்த கால்சட்டையிலேயே (பேன்ட்) சிறுநீர் கழித்துவிட்டான். இதனால் ஆத்திரத்தின் உச்சத்துக்கே சென்ற ஆசிரியை பிரித்தி , அச்சிறுவனை தனியறைக்கு இழுத்து சென்று, கேஸ் அடுப்பில் கத்தியை பழுக்க காய்ச்சி, சிறுவனின் அந்தரங்க உறுப்பில் சூடு வைத்துள்ளார்.

அதிர்ச்சி

மாலை பள்ளி முடிந்து வீடு திரும்பிய சிறுவன், பிறப்புறுப்பில் பயங்கர வலி எடுப்பதாக கூறி அழுதுள்ளான். பதறியடித்தபடி தாய் சோதித்து பார்த்தபோது, குழந்தையின் அந்தரங்க உறுப்பில் கொப்புளம் ஏற்பட்டு கருகியிருந்ததை கண்டு அதிர்ச்சியில் உறைந்தார். குழந்தையிடம் விசாரித்தபோது ஆசிரியை செய்த கொடூரத்தை அழுதுகொண்டே விவரித்துள்ளான்.

பள்ளி நிர்வாகம் அலட்சியம்

இதையடுத்து, பாதிக்கப்பட்ட சிறுவனின் பெற்றோர் பள்ளி முதல்வர் ஹேமலதா சிங் மற்றும் பள்ளி நிர்வாகத்திடம் நியாயம் கேட்டு சென்றுள்ளனர். ஆனால், பள்ளி நிர்வாகம் எந்தவித நடவடிக்கையும் எடுக்காமல் அலட்சியமாக பதிலளித்து, பெற்றோரை திருப்பி அனுப்பியதாகக் கூறப்படுகிறது.

புகார்

பள்ளி நிர்வாகத்தின் அலட்சிய போக்கால் ஆத்திரமடைந்த பெற்றோர், அருகில் உள்ள காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். புகாரின் பேரில், கொடூர ஆசிரியை பிரித்தி, பள்ளி முதல்வர் ஹேமலதா சிங் மற்றும் பள்ளி மேலாளர் ஆகியோர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர். தற்போது குற்றவாளிகளிடம் போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். குழந்தையின் பிறப்புறுப்பில் கத்தியால் சூடு வைத்த சம்பவம், அப்பகுதியில் பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது.

X

logo
Daily Thanthi
www.dailythanthi.com