

பேராயரை கைது செய்யக்கோரி, மிஷனரிஸ் ஆப் ஜீசஸ் சபையை சேர்ந்த கன்னியாஸ்திரிகள் கேரளாவில் போராட்டம் நடத்தி வந்தனர். அந்த போராட்டங்களில், ரோமன் கத்தோலிக்க திருச்சபையில் அடங்கிய பிரான்சிஸ்கன் கிளாரிஸ் சபையை சேர்ந்த கன்னியாஸ்திரி லூசி கலப்புராவும் கலந்து கொண்டார். அதையடுத்து, அதே ஆண்டு ஆகஸ்டு மாதம் அவர் பிரான்சிஸ்கன் சபையில் இருந்து நீக்கப்பட்டார். திருச்சபை விதிமுறைகளுக்கு முரணான வாழ்க்கை முறையை அவர் மேற்கொண்டு வருவதாக அந்த சபை தெரிவித்தது. அந்த முடிவுக்கு வாடிகன் நிர்வாகம் ஒப்புதல் அளித்தது.
ஆனால், அந்த குற்றச்சாட்டை கன்னியாஸ்திரி லூசி கலப்புரா மறுத்தார். தன்னை திட்டமிட்டு மோசமாக சித்தரிப்பதாக அவர் கூறினார். சபையின் முடிவுக்கு எதிராக அவர் மேல்முறையீடு செய்தார். அதை வாடிகனில் உள்ள ஓரியண்டல் சபை தள்ளுபடி செய்தது. கடந்த ஆண்டு மாச் மாதம் 2-வது முறையாக அவர் மேல்முறையீடு செய்தார். அந்த மேல்முறையீடும் தள்ளுபடி செய்யப்பட்டது. அதையடுத்து, 3-வது தடவையாக லூசி கலப்புரா மேல்முறையீடு செய்தார். அதை பரிசீலித்த வாடிகனில் உள்ள உயரிய நீதி அமைப்பு நிராகரித்து விட்டது. இதை வாடிகன் செய்தித்தொடர்பாளர் உறுதி செய்தார். ஆனால், இந்த முடிவு அநீதியானது என்று லூசி கலப்புரா எதிர்ப்பு தெரிவித்துள்ளார்.