கேரள முதல்-மந்திரியாகிறார், வி.டி.சதீசன்.. நாளை பதவி ஏற்பு.. ராகுல்காந்தி, விஜய் பங்கேற்பு

விழாவில் சிறப்பு அழைப்பாளர்கள் உள்பட 75 ஆயிரம் முதல் 1 லட்சம் பேர் பங்கேற்பார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.
கேரள முதல்-மந்திரியாகிறார், வி.டி.சதீசன்.. நாளை பதவி ஏற்பு.. ராகுல்காந்தி, விஜய் பங்கேற்பு
Published on

திருவனந்தபுரம்,

கேரள மாநில சட்டசபை தேர்தல் முடிவு கடந்த 4-ந்தேதி வெளியானது. மொத்தம் உள்ள 140 தொகுதிகளில் காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய ஜனநாயக முன்னணி 102 இடங்களில் வெற்றி பெற்று ஆட்சியை கைப்பற்றியது.

காங்கிரஸ் 63 இடங்களில் வென்று தனிப்பெரும் கட்சியாக உருவெடுத்தது. கூட்டணி கட்சியான இந்திய யூனியன் முஸ்லிம் லீக் கட்சி 22 தொகுதிகளை கைப்பற்றியது. மேலும் கேரள காங்கிரஸ்(ஜோசப்) 7 இடங்களிலும், புரட்சி சோஷியலிஸ்ட் கட்சி(ஆர்.எஸ்.பி.) 3 இடங்களிலும், கேரள காங்கிரஸ் (ஜேக்கப்), புரட்சி மார்க்சிஸ்ட் கட்சி, கம்யூனிஸ்டு மார்க்சிஸ்ட் கேரள மாநில கட்சி (சி.எம்.பி.கே.எஸ்.சி.) தலா ஒரு இடத்திலும், சுயேச்சைகள்(காங்கிரஸ் ஆதரவு) 4 இடங்களிலும் வெற்றி பெற்றன. ஆளுங்கட்சியாக இருந்த மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கூட்டணி 35 இடங்களிலும், பா.ஜனதா முதன் முறையாக 3 தொகுதிகளிலும் வென்றது.

காங்கிரஸ் கட்சியின் அமோக வெற்றி மூலம் 10 ஆண்டுகளாக ஆட்சியில் நீடித்த மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு பதவி காலம் அத்துடன் முடிவுக்கு வந்தது. இதற்கிடையே, காங்கிரசில் முதல்-மந்திரி பதவிக்கு கடும் போட்டி நிலவியது. 10 நாட்கள் இழுபறிக்கு பிறகு எதிர்க்கட்சி தலைவராக இருந்த வி.டி.சதீசனை முதல்-மந்திரியாக தேர்வு செய்து காங்கிரஸ் மேலிடம் அறிவித்தது.

இதையடுத்து கவர்னர் ஆர்.வி.அர்லேகரை, வி.டி.சதீசன் சந்தித்து எம்.எல்.ஏ.க்களின் ஆதரவு கடிதத்தை கொடுத்து ஆட்சி அமைக்க அழைப்பு விடுக்கும்படி கேட்டு கொண்டார். அதற்கேற்ப கவர்னரும் அழைப்பு விடுத்தார்.

இதனை தொடர்ந்து முதல்-மந்திரியாக வி.டி.சதீசன் பதவி ஏற்பு விழாவை நாளை (திங்கட்கிழமை) காலை 10 மணிக்கு திருவனந்தபுரம் சென்டிரல் ஸ்டேடியத்தில் நடத்த முடிவு செய்யப்பட்டது. கேரளாவில் 10 ஆண்டுகளுக்கு பிறகு காங்கிரஸ் ஆட்சி அரியணையில் அமர உள்ளதால், பதவி ஏற்பு விழா பிரமாண்டமாக நடத்தப்படுகிறது.

இந்த விழாவில் காங்கிரஸ் கட்சியின் தேசிய தலைவர் மல்லிகார்ஜுன கார்கே, மக்களவை எதிர்க்கட்சி தலைவர் ராகுல்காந்தி, பிரியங்கா காந்தி எம்.பி., தமிழக முதல்-அமைச்சர் விஜய் மற்றும் காங்கிரஸ் ஆளும் மாநில முதல்-மந்திரிகள் சித்தராமையா (கர்நாடகம்), ரேவந்த்ரெட்டி (தெலுங்கானா), சுக்விந்தர் சிங் சுகு (இமாசல பிரதேசம்) உள்ளிட்ட முக்கிய பிரமுகர்கள் பங்கேற்கிறார்கள். விழாவில் சிறப்பு அழைப்பாளர்கள் உள்பட 75 ஆயிரம் முதல் 1 லட்சம் பேர் பங்கேற்பார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.

X

Daily Thanthi
www.dailythanthi.com