

புதுடெல்லி,
கொரோனா பரவல் காரணமாக கடந்த 2020ம் ஆண்டு செப்டம்பர் மாதம் மழைக்காலக்கூட்டத்தொடர் தொடங்கி பாதியிலேயே நிறுத்தப்பட்டது. குளிர்காலக்கூட்டத்தொடர் நடத்தப்படவில்லை. இந்த ஆண்டு பட்ஜெட் கூட்டத்தொடர் ஏப்ரல் 8ஆம் தேதிவரை நடத்த முடிவு செய்யப்பட்டது. ஆனால், இரு பிரிவுகளாக நடத்த முடிவு செய்யப்பட்டும், கொரோனா வைரஸ் பரவல் காரணமாக மார்ச் 8ஆம்தேதியோடு கூட்டத்தொடர் முடித்துக்கொள்ளப்பட்டது.
இந்த சூழலில் நாடாளுமன்ற மழைக்காலக் கூட்டத்தொடர் வரும் 19-ஆம்தேதி தொடங்குகிறது, 20 அமர்வுகள் வரை நடத்தப்படும் கூட்டத்தொடர் ஆகஸ்ட் 13ஆம் தேதிவரை நடத்த முடிவு செய்யப்பட்டுள்ளது. கொரோனா வைரஸ் 2-வது அலையின் தாக்கம் படிப்படியாகக் குறைந்துவரும் நிலையில் கூட்டத்தொடர் நடத்தப்படுகிறது.
இந்நிலையில் நாடாளுமன்றத்தின் மழைக்கால கூட்டத்தொடருக்கு முன்னதாக, இன்று (சனிக்கிழமை) தனது இல்லத்தில் அனைத்து நாடாளுமன்ற கட்சி தலைவர்களின் கூட்டத்திற்கு, துணை ஜனாதிபதியும், மாநிலங்களவைத் தலைவருமான வெங்கையா நாயுடு அழைப்பு விடுத்துள்ளார்.
முன்னதாக நாடாளுமன்ற மழைக்காலக் கூட்டத்தொடரானது ஜூலை 19 ஆம் தொடங்கி ஆகஸ்ட் 13 ஆம் தேதி வரை மொத்தம் 19 நாட்கள் நடைபெறும் என மக்களவை சபாநாயகர் ஓம் பிர்லா அறிவித்திருந்தார். நாடாளுமன்ற மழைக்காலக் கூட்டத்தொடரின் போது அன்றாடம் காலை 11 மணி முதல் மாலை 6 மணி வரை இரு அவைகளும் செயல்படும் என அவர் தெரிவித்திருந்தார். நாடாளுமன்ற மழைக்கால கூட்டத்தொடரில் 40 மசோதாக்கள், 5 அவசர சட்டங்கள் நிறைவேற்ற மத்திய அரசு திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது.