

புதுடெல்லி,
துணை ஜனாதிபதி சி.பி. ராதாகிருஷ்ணன் 2 நாள் பயணமாக நாளை உத்தராகண்ட் மாநிலத்திற்கு செல்கிறார்.
நாளை உத்தராகண்ட் மாநிலம் டேராடூனுக்கு துணை ஜனாதிபதி சி.பி. ராதாகிருஷ்ணன் செல்கிறார்.அங்குள்ள இந்திரா காந்தி தேசிய வன அகாடமிக்கு அவர் நேரில் செல்கிறார். அங்கு 2025-27-ம் ஆண்டு பிரிவை சேர்ந்த இந்திய வனப் பணி பயிற்சி அதிகாரிகளுடன் அவர் கலந்துரையாடுகிறார்.
அதனை தொடர்ந்து, 20-ம் தேதி முசோரிக்கு துணை ஜனாதிபதி பயணம் மேற்கொள்கிறார். அங்குள்ள புகழ்பெற்ற லால்பகதூர் சாஸ்திரி தேசிய நிர்வாக அகாடமிக்கு அவர் செல்கிறார். 2024-ம் ஆண்டு பிரிவுக்கான இரண்டாம் கட்ட ஐஏஎஸ் பயிற்சியின் நிறைவு நாள் விழா அங்கு நடக்கிறது. இந்த விழாவில் துணை ஜனாதிபதி சி.பி. ராதாகிருஷ்ணன் தலைமை விருந்தினராக பங்கேற்று உரையாற்றுகிறார்.
இந்த விழாவின் போது அகாடமி வளாகத்தில் முக்கிய நிகழ்வாக சர்தார் வல்லபாய் படேல் சிலைக்கு துணை ஜனாதிபதி மரியாதை செய்கிறார். அதேபோல் முன்னாள் பிரதமர் லால் பகதூர் சாஸ்திரி சிலைக்கும் அவர் மலர் தூவி மரியாதை செலுத்த உள்ளார். துணை ஜனாதிபதியின் இந்த 2 நாள் உத்தராகண்ட் பயணத்தை முன்னிட்டு அங்கு பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.