

புதுடெல்லி,
துணை ஜனாதிபதி வெங்கய்யா நாயுடு 5 நாள் சுற்றுப்பயணமாக, கவுதமாலா, பனாமா, பெரு ஆகிய நாடுகளில் சுற்றுப்பயணம் மேற்கொள்கிறார். இதற்காக இன்று காலை தனது முதல் பயணமாக கவுதமாலாவுக்கு வெங்கய்யா நாயுடு புறப்பட்டுச் சென்றார்.
கவுதமாலா செல்லும், துணை ஜனாதிபதி வெங்கையா நாயுடு, அந்நாட்டு ஜனாதிபதி ஜிம்மி மொரலெஸ், துணை ஜனாதிபதி ஜாபத் கேப்ரெரா ஆகியோரை சந்தித்து பேச்சுவார்த்தை நடத்துகிறார். இருநாட்டு உறவுகள், பாதுகாப்பு உள்ளிட்ட விஷயங்கள் குறித்து அந்நாட்டு தலைவர்களுடன் ஆலோசனை நடத்துகிறார். இதையடுத்து, 7-ம் தேதி பனாமா நாட்டுக்கு செல்லும் வெங்கய்யா நாயுடு , அந்நாட்டு ஜனாதிபதி ஜுவான் கார்லோஸ் வரேலாவை சந்திக்கிறார். அப்போது, இருநாடுகள் இடையே வர்த்தகம் உள்ளிட்ட ஒப்பந்தங்கள் கையெழுத்தாகின்றன.
பனாமா பயணத்தை முடித்துக்கொண்டு பெரு நாட்டுக்கு செல்கிறார். அந்நாட்டின் ஜனாதிபதி மார்டின் விஸ்காரா, துணை ஜனாதிபதி மெர்சிடஸ் அரோஸ் ஆகியோரை சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தும் வெங்கய்யா நாயுடு, அங்கிருந்து புறப்பட்டு 12-ம் தேதி இந்தியா திரும்புகிறார். துணை ஜனாதிபதியாக பதவியேற்றபின் வெங்கய்யா நாயுடு செல்லும் முதல் வெளிநாட்டு சுற்றுப்பயணம் இது என்பது குறிப்பிடத்தக்கது.