துணை ஜனாதிபதி வெங்கையா நாயுடுவிற்கு 2-வது முறையாக கொரோனா தொற்று பாதிப்பு

வெங்கையா நாயுடுவிற்கு கொரோனா பாதிப்பு உறுதியாகியுள்ளதால், அவரால் குடியரசு தின நிகழ்ச்சியில் கலந்து கொள்ள முடியாத சூழல் ஏற்பட்டுள்ளது.
துணை ஜனாதிபதி வெங்கையா நாயுடுவிற்கு 2-வது முறையாக கொரோனா தொற்று பாதிப்பு
Published on

ஐதராபாத்,

இந்தியாவில் கொரோனா 3-வது அலை மற்றும் ஒமைக்ரான் தொற்று பாதிப்பு வேகமாக பரவி வரும் நிலையில், பிரபலங்கள், அரசியல் தலைவர்கள், சினிமா மற்றும் விளையாட்டு நட்சத்திரங்களும் கொரோனா பாதிப்பிற்கு ஆளாகி வருகின்றனர். இந்த நிலையில் துணை ஜனாதிபதி வெங்கையா நாயுடுவிற்கு தற்போது கொரோனா பாதிப்பு உறுதியாகியுள்ளது.

இது குறித்து துணை ஜனாதிபதி அலுவலகத்தின் அதிகாரப்பூர்வ டுவிட்டர் பக்கத்தில் வெளியிடப்பட்டுள்ள பதிவில், இன்று ஐதராபாத்தில் துணை ஜனாதிபதி வெங்கையா நாயுடுவிற்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. அவர் வீட்டுத் தனிமையில் தன்னை தனிமைப்படுத்திக் கொண்டுள்ளார். அவருடன் கடந்த சில நாட்களாக தொடர்பில் இருந்தவர்கள் தங்களை தனிமைப்படுத்திக் கொண்டு கொரோனா பரிசோதனை மேற்கொள்ளுமாறு அவர் கேட்டுக் கொண்டுள்ளார் என பதிவிடப்பட்டுள்ளது.

இன்னும் சில தினங்களில் டெல்லியில் குடியரசு தின விழா அணிவகுப்பு நடைபெற உள்ள நிலையில், தற்போது வெங்கையா நாயுடுவிற்கு கொரோனா பாதிப்பு உறுதியாகியுள்ளதால், அவரால் குடியரசு தின நிகழ்ச்சியில் கலந்து கொள்ள முடியாத சூழல் ஏற்பட்டுள்ளது. வெங்கையா நாயுடுவிற்கு ஏற்கனவே ஒருமுறை கொரோனா பாதிப்பு ஏற்பட்டு குணமடைந்திருந்த நிலையில், தற்போது 2-வது முறையாக அவருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com