

ஸ்ரீ விஜயபுரம்,
வங்காளவிரிகுடா கடல் பகுதியில் அமைந்துள்ள இந்திய யூனியன் பிரதேசம் அந்தமான் நிகோபார் தீவுகள். இந்த யூனியன் பிரதேசத்தில் பல்வேறு தீவுகள் உள்ளன.
இந்நிலையில், 2 நாட்கள் பயணமாக துணை ஜனாதிபதி சி.பி. ராதாகிருஷ்ணன் இன்று அந்தமான் நிகோபார் தீவுகளுக்கு சென்றுள்ளார்.
டெல்லியில் இருந்து சிறப்பு விமானம் மூலம் தலைநகர் விஜயபுரத்தில் உள்ள கடற்படை தளத்திற்கு சென்ற துணை ஜனாதிபதி சி.பி.ராதாகிருஷ்ணனை அதிகாரிகள் வரவேற்றனர். இதையடுத்து கவர்னர் மாளிகை சென்ற துணை ஜனாதிபதி சி.பி.ராதாகிருஷ்ணன் அங்கு கவர்னர் டிகே ஷோசை சந்தித்தார்.
இதையடுத்து, துணை ஜனாதிபதி சி.பி.ராதாகிருஷ்ணன் இன்று மாலை செல்லுலார் சிறையில் அமைக்கப்பட்டுள்ள தேசிய நினைவுச்சின்னத்திற்கு மரியாதை செலுத்துகிறார். பின்னர், சாவர்க்கர் அடைக்கப்பட்டிருந்த சிறை அறையையும் பார்வையிடுகிறார். பின்னர், சுதந்திர போராட்ட வரலாறு மற்றும் சுதந்திர போராட்ட வீரர்களின் தியாகங்களை சித்தரிக்கும் வகையில் நடைபெறும் நிகழ்ச்சியில் அவர் பங்கேற்க உள்ளார்.
இதனை தொடர்ந்து பயணத்தின் 2வது நாளான நாளை ஸ்ரீவிஜயபுரத்தில் உள்ள பிளாக் பாயிண்ட்டில் தேசிய கொடியை ஏற்றுகிறார். மேலும், இந்த பயணத்தின்போது சுதந்திர போராட்ட வீரர்களுக்கு அஞ்சலி செலுத்துகிறார். 2 நாட்கள் பயணத்திற்குப்பின் நாளை மாலை துணை ஜனாதிபதி டெல்லி திரும்புகிறார்.