

ஜம்மு,
ஜம்மு மற்றும் காஷ்மீரில் கிஸ்த்வார் மாவட்டத்தில் உள்ள பல்வேறு அரசு அலுவலகங்களில் பணியாளர்கள் சரியாக வேலை செய்வதில்லை என புகார் எழுந்தது. தொடர்ந்து பணிநேரத்தில் சில ஊழியர்கள் வெளியே சுற்றி திரிவதும், சந்தை பகுதிகளுக்கு செல்வதும், அங்கு தங்களது வர்த்தக பணிகளில் ஈடுபடுவதும் தெரிய வந்துள்ளது.
இதனை அடுத்து திடீரென நடத்தப்பட்ட ஆய்வில், 78 அரசு ஊழியர்கள் பணிநேரத்தில் அலுவலகத்தில் இல்லாதது தெரிய வந்தது. இதனை தொடர்ந்து அவர்களின் சம்பளம் நிறுத்தி வைக்கப்பட்டது.
இது நடந்து 10 நாட்களில் மற்றொரு நடவடிக்கையை அரசு நிர்வாகம் மேற்கொண்டுள்ளது. இதன்படி சந்தை பகுதிகள், தேநீர் கடைகள் மற்றும் உணவு விடுதிகளில் வீடியோ பதிவு மேற்கொள்ள கிஸ்த்வார் மாவட்ட நிர்வாகம் உத்தரவிட்டு உள்ளது. பணிநேரத்தில் ஜாலியாக சுற்றி திரியும் அரசு ஊழியர்களை கையும் களவும் ஆக பிடிக்கவே இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டு உள்ளது.
இதேபோன்று வீடியோ கண்காணிப்பு குழுக்களை அமைக்கவும் உத்தரவிடப்பட்டு உள்ளது. இவர்கள் அரசு ஊழியர்களின் நடவடிக்கைகளை கண்காணித்திடுவர். இவர்கள் பதிவு செய்யும் வீடியோவில் உள்ள அரசு ஊழியர்கள் அடையாளம் காணப்பட்டு, விதிகளின்படி கடும் நடவடிக்கை எடுக்கப்படும்.