

புதுடெல்லி,
வீடியோகான் நிறுவனத்துக்கு 3250 கோடி ரூபாய் கடன்வழங்கியதில் மோசடி நடைபெற்றதாக ஐசிஐசிஐ மேலாண் இயக்குநர் சந்தா கோச்சார் மீது குற்றஞ்சாட்டப்பட்டுள்ளது. வீடியோகான் நிறுவனத்துக்கு ஐசிஐசிஐ வங்கி வழங்கிய 3250-கோடி ரூபாய் கடனை வாராக்கடனாக அறிவித்துள்ளது.
இதில் முறைகேடு நடைபெற்றதாகக் கூறப்படும் நிலையில், எந்த முறைகேடும் நடைபெறவில்லை என ஐசிஐசிஐ வங்கி விளக்கம் அளித்துள்ளது. அதில் வீடியோகான் நிறுவனத்துக்குக் கடன் வழங்குவது என 20-வங்கிகள் கொண்ட குழு முடிவெடுத்ததாகவும், மொத்தக் கடனில் ஐசிஐசிஐ வங்கியின் பங்கு பத்து விழுக்காட்டுக்கும் குறைவானதே என்றும் குறிப்பிட்டுள்ளது.
இதற்கிடையே, இந்த கடன் விவகாரத்தில் வீடியோகான் குழுமம் மற்றும் சாந்தா கோச்சாரின் கணவர் தீபக் கோச்சாரின் நுபவர் ரெனிவல்ஸ் நிறுவனமும் சம்பந்தப்பட்டிருப்பதாக புகார்கள் எழுந்தன.
இந்த நிலையில்,விடியோகான் நிறுவனத்துக்கு லோன் வழங்கியதில், ஏதேனும் முறைகேடு நடைபெற்றதா? என கண்டறியும் முயற்சியாக முதற்கட்ட விசாரணையை சிபிஐ துவங்கியுள்ளது. மேலும், கடன் வழங்கியது தொடர்பான ஆவணங்களை ஆய்வு செய்து வருவதாகவும், தவறு நடைபெற்றது தெரியவந்தால், ஐசிஐசிஐ வங்கி மேலாண்மை இயக்குநர் மற்றும் தலைமை செயல் அதிகாரி சந்தா கோச்சார் மற்றும் அவரது கணவர் தீபக் கோச்சார் ஆகியோருக்கு சம்மன் அனுப்பப்படும் என்று சிபிஐ அதிகாரிகள் தெரிவித்தனர்.