

ஆமதாபாத்,
182 உறுப்பினர்களைக் கொண்ட குஜராத் சட்டசபை தேர்தலில் 99 தொகுதிகளை கைப்பற்றி, 6வது முறையாக பா.ஜனதா வெற்றி பெற்றது. குஜராத் மற்றும் இமாசல பிரதேசத்தில் கட்சியின் சட்டமன்ற தலைவரை தேர்வு செய்யும் பணிக்கு பார்வை குழு அமைக்கப்பட்டது. குஜராத் மாநிலத்திற்கு மத்திய நிதிமந்திரி அருண் ஜெட்லி மற்றும் பா.ஜனதா பொதுச்செயலாளர் சரோஜ் பாண்டே ஆகியோர் பொறுப்பாளராக நியமனம் செய்யப்பட்டு உள்ளனர். இன்று புதியதாக தேர்வு செய்யப்பட்ட பா.ஜனதா எம்.எல்.ஏ.க்கள் கூட்டம் நடைபெற்றது. அப்போது ஆலோசனை நடைபெற்றது.
மாநிலத்தில் மீண்டும் முதல்-மந்திரியாக விஜய் ரூபானி தேர்வு செய்யப்பட்டார், நிதின் படேலும் தன்னுடைய பதவிக்கு மீண்டும் திரும்புகிறார் என தெரிவிக்கப்பட்டது.
குஜராத் மாநிலத்தில் புதிய பாரதீய ஜனதா அரசு டிசம்பர் மாதம் 25-ம் தேதி பதவி ஏற்கிறது என தெரிவிக்கப்பட்டு உள்ளது.
மாநிலத்தில் புதிய அரசை அமைக்கும் வகையில் விஜய் ரூபானி மற்றும் அவருடைய அமைச்சரவை உறுப்பினர்கள் தங்களுடைய பதவியை இன்று ராஜினாமா செய்தனர். குஜராத் மாநிலத்தை பொறுத்தவரையில் யார் அடுத்த முதல்-மந்திரி? என்பதில் விஜய் ரூபானியே முன்னிலை பெற்று வந்தார். மாநிலத்தில் பாரதீய ஜனதா வெற்றி பெற்று இருந்தாலும் காங்கிரசும் வலுவான எதிர்க்கட்சியாக உருவெடுத்து உள்ளது. இவ்விவகாரத்தில் பா.ஜனதா பல்வேறு விமர்சனங்களை சந்தித்து வருகிறது. எனவே முதல்-மந்திரி மாற்றம் என்பது தவறை ஒப்புக்கொள்வதாகிவிடும் என பா.ஜனதா பார்ப்பதாக கூறப்படுகிறது.