

புதுடெல்லி,
டெல்லி அரசு சார்பில் ‘ஆற்றல்மிகு பெண்கள், செழிப்பான டெல்லி’ (Sashakt Nari Samriddh Delhi) என்ற பெயரில் பெண்களின் முன்னேற்றத்தை ஊக்குவிக்கும் வகையில் நடத்தப்பட்ட நிகழ்ச்சியில், ஜனாதிபதி திரவுபதி முர்மு கலந்து கொண்டார். இந்த நிகழ்ச்சியில் அவர் பேசியதாவது;-
“பெண்கள் பல்வேறு துறைகளில் முன்னேறி வந்தாலும், இன்னும் வன்முறை, பொருளாதார, சமூக ஏற்றத் தாழ்வுகள், தவறான சித்தரிப்புகள் மற்றும் சுகாதாரம் தொடர்பான பிரச்சினைகளை எதிர்கொள்கிறார்கள் என்பது உண்மை. இந்த தடைகளை நீக்குவதன் மூலம் மட்டுமே பெண்களுக்கு அதிகாரமளிப்பதன் இலக்கை நாம் அடைய முடியும்.
பெண்கள் சுயாதீனமான முடிவுகளை எடுக்கும் திறன், சுயமரியாதையுடன் கூடிய வாழ்க்கை மற்றும் மரியாதை, வாய்ப்பு மற்றும் பாதுகாப்பு ஆகியவற்றைப் பெறும்போது அவர்கள் உண்மையிலேயே அதிகாரம் பெறுவார்கள்.
குடும்ப வன்முறை, சம ஊதியம் மற்றும் சொத்துரிமை தொடர்பான பிரச்சினைகளில் இருந்து பெண்களை பாதுகாக்க பல சீர்திருத்தங்கள் செய்யப்பட்டுள்ளன. இந்திய அரசு பெண்களுக்கு அதிகாரமளிப்பதைத் தாண்டி, பெண்கள் தலைமையில் வளர்ச்சியை முன்னெடுத்து செல்ல நடவடிக்கை எடுக்கிறது என்பது மிகுந்த திருப்தியை அளிக்கிறது.”
இவ்வாறு அவர் தெரிவித்தார்.