ஜனநாயகத்தில் வன்முறைக்கு இடமில்லை - பிரதமர் மோடி

டிரம்ப்பும், அவரது மனைவியும் காயமின்றி உயிர் தப்பியதை அறிந்து நிம்மதி அடைந்ததாக பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.
கோப்புப்படம்
கோப்புப்படம்
Published on

புதுடெல்லி,

அமெரிக்க ஜனாதிபதி டொனால்டு டிரம்ப் மற்றும் அவரது மனைவி மெலானியா டிரம்ப் ஆகியோர் கலந்துகொண்ட இரவு உணவு விழாவில் திடீரென துப்பாக்கிசூடு நடத்தப்பட்டது. இதனால் அந்த பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. அந்த நேரத்தில் மேடையில் இருந்த ஜனாதிபதி டொனால்டு டிரம்ப் மற்றும் மெலானியா டிரம்ப் ஆகியோரை பாதுகாப்பு அதிகாரிகள் உடனடியாக பாதுகாப்பாக வெளியேற்றினர்.

இந்த சம்பவத்தில் டிரம்ப் மற்றும் மெலானியாவிற்கு எந்த பாதிப்பும் ஏற்படவில்லை என்றும், அவர்கள் நலமாக இருப்பதாகவும் தகவல்கள் உறுதி செய்யப்பட்டுள்ளது. முன்னதாக அங்குள்ள ஓட்டல் வளாகத்திற்குள் 5 முதல் 8 முறை பலத்த வெடிச்சத்தம் கேட்டதாக அங்கிருந்த ஒரு புகைப்படக்கலைஞர் ஒருவர் தெரிவித்தார். இந்த சத்தம் விருந்து நடைபெற்ற பிரதான அரங்கிற்குள் கேட்கவில்லை என்றாலும், துப்பாக்கி ஏந்திய நபர் ஒருவர் ஊடுருவி இருப்பதாக வெளியான ஆரம்பகட்ட தகவல்களால் அங்கிருந்த விருந்தினர்கள் அனைவரும் கடும் அதிர்ச்சிக்கு உள்ளாகி இருந்ததாக தகவல் தெரிவிக்கப்பட்டிருந்தது.

இந்நிலையில் அமெரிக்க ஜனாதிபதி டிரம்ப் பங்கேற்ற நிகழ்ச்சியில் துப்பாக்கிசூடு நடத்தப்பட்ட சம்பவத்திற்கு பிரதமர் மோடி கண்டனம் தெரிவித்துள்ளார்.

இதுதொடர்பாக அவர் தனது எக்ஸ் வலைதளத்தில் பதிவிட்டுள்ளதாவது:-

அமெரிக்க ஜனாதிபதி டிரம்ப் பங்கேற்ற நிகழ்ச்சியில் துப்பாக்கிசூடு நடத்தப்பட்டது கண்டிக்கத்தக்கது. டிரம்ப், அவரது மனைவி, துணை ஜனாதிபதி ஆகியோர் காயமின்றி உயிர் தப்பியதை அறிந்து நிம்மதி அடைந்தேன். டிரம்ப் உள்ளிட்டோர் தொடர்ந்து பாதுகாப்பாகவும் நலமாகவும் இருக்க எனது வாழ்த்துகளை கூறுகிறேன். ஜனநாயகத்தில் வன்முறைக்கு இடமில்லை, அது சந்தேகத்திற்கு இடமின்றி கண்டிக்கப்பட வேண்டும்.

இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com