திருப்பதியில் ஜூன் இறுதிவரை விஐபி பிரேக் தரிசனம் ரத்து

கோடை விடுமுறையால் திருப்பதி ஏழுமலையான் கோவிலுக்கு வரும் பக்தர்கள் எண்ணிக்கை அதிகரித்துள்ளது.
திருப்பதியில் ஜூன் இறுதிவரை விஐபி பிரேக் தரிசனம் ரத்து
Published on

திருப்பதி,

திருப்பதி ஏழுமலையான் கோவிலில், பக்தர்கள் வசதியாக சுவாமி தரிசனம் செய்ய பல்வேறு தரிசன முறைகள் உள்ளன. அவற்றில் விஐபி பிரேக் தரிசனம் என்பது ஒரு சிறப்பு தரிசன முறையாகும். இது மற்ற தரிசனங்களை விட குறைவான கூட்டத்துடனும், விரைவாகவும் தரிசனம் செய்ய வழிவகை செய்கிறது.

பொதுவாக, விஐபி பிரேக் தரிசனம் என்பது திங்கள், செவ்வாய், புதன், சனி மற்றும் ஞாயிற்றுக் கிழமைகளில் காலை 10.15 மணிக்கும், வியாழக்கிழமைகளில் காலை 07.15 மணிக்கும், வெள்ளிக்கிழமைகளில் காலை 08.15 மணிக்கும் நடைபெறுகிறது. முக்கிய பிரமுகர்கள், தேவஸ்தான ஊழியர்களின் பரிந்துரை கடிதங்கள் வைத்திருப்பவர்கள் மற்றும் சில சமயங்களில் ஆன்லைன் மூலம் முன் பதிவு செய்த பக்தர்கள் இந்த தரிசனத்தில் அனுமதிக்கப்படுவர். இந்த தரிசனத்திற்கு ரூ.500 கட்டணம் வசூலிக்கப்படுகிறது.

இந்தநிலையில், கோடை விடுமுறையால் திருப்பதி ஏழுமலையான் கோவிலுக்கு வரும் பக்தர்கள் எண்ணிக்கை அதிகரித்துள்ளது. திருப்பதியில் இலவச தரிசனத்திற்கு 24 மணி நேரம் பக்தர்கள் காத்திருக்கும் சூழல் ஏற்பட்டுள்ளது. கூட்டம் தொடர்ந்து அதிகரித்தவண்ணம் உள்ளதால் 24 மணி நேரம் காத்திருந்து சாமி தரிசனம் செய்து வருகின்றனர்.

இந்தசூழ்நிலையில், திருப்பதி திருமலையில் ஜூன் மாதம் இறுதிவரை விஐபி பிரேக் தரிசனம் ரத்து செய்யப்படுவதாகவும் திருப்பதியில் சர்வ தரிசன டோக்கன் வழங்குவதையும் ரத்து செய்ய திட்டமிடப்பட்டுள்ளது. நாள்தோறும் 3,000க்கும் மேற்பட்டோர் விஐபி பிரேக் தரிசன அனுமதி மூலம் தரிசனம் செய்து வருகின்றனர். விஐபி தரிசனம் ரத்து செய்யப்படுவதால், தினமும் கூடுதலாக 15,000 பக்தர்கள் தரிசனம் செய்ய வாய்ப்பு உள்ளது.

X

Daily Thanthi
www.dailythanthi.com