

புதுடெல்லி,
கொரோனா வைரஸ் அச்சுறுத்தலை தொடர்ந்து அமெரிக்க ஜனாதிபதி டிரம்ப் தேசிய அளவில் நெருக்கடி நிலையை அறிவித்தார்.
அந்த அறிவிப்பை தொடர்ந்து கொரோனா நோய் தடுப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் தீவிரப்படுத்தப்பட்டு உள்ளன. பல்வேறு பயண கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன.
இதையடுத்து இந்தியாவில் இருந்து அமெரிக்கா செல்வதற்கான விசா வழங்குவது நாளை (திங்கட்கிழமை) முதல் நிறுத்தப்பட உள்ளது. கொரோனா வைரஸ் அச்சம் காரணமாக விசா வழங்கும் நடைமுறைகள் அனைத்தும் நிறுத்தி வைக்கப்படுவதாக இந்தியாவில் உள்ள அமெரிக்க தூதரகம் மற்றும் துணை தூதரகங்கள் அறிவித்துள்ளன.
கொரோனா வைரஸ் தாக்குதலால் உலகம் முழுவதும் 5 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர். மேலும் அமெரிக்காவில் உள்ள 50 மாநிலங்களில் 46 மாநிலங்களில் கொரோனா வைரஸ் பரவி இருப்பது குறிப்பிடத்தக்கது