நடுவானில் பயணிக்கு வாந்தி, உடல்நல குறைவு; நாக்பூரில் இண்டிகோ விமானம் அவசர தரையிறக்கம்

மும்பையில் இருந்து ராஞ்சிக்கு புறப்பட்ட இண்டிகோ விமானம், மருத்துவ அவசரகால நிலைக்காக நாக்பூருக்கு திருப்பி விடப்பட்டது.
நடுவானில் பயணிக்கு வாந்தி, உடல்நல குறைவு; நாக்பூரில் இண்டிகோ விமானம் அவசர தரையிறக்கம்
Published on

ராஞ்சி,

மராட்டியத்தின் மும்பை நகரில் இருந்து ஜார்க்கண்டின் ராஞ்சி நகரை நோக்கி 6இ 5093 என்ற எண் கொண்ட இண்டிகோ விமானம் ஒன்று புறப்பட்டு சென்றது. அதில், தேவானந்த் திவாரி (வயது 62) என்பவர் பயணித்துள்ளார்.

விமானம் நடுவானில் சென்றபோது, தேவானந்துக்கு உடல்நல குறைவு ஏற்பட்டது. அவர் வாந்தி எடுத்திருக்கிறார். காசநோய் உள்பட வியாதியால் கடுமையாக பாதிக்கப்பட்ட அவரது நிலைமை மோசமடைந்தது.

இதனால், மருத்துவ அவசரகால நிலைக்காக விமானம் உடனடியாக நாக்பூர் விமான நிலையத்திற்கு திருப்பி விடப்பட்டது.

விமானம் தரையிறங்கியதும் அந்த பயணியை மருத்துவமனையில் சேர்த்தனர். எனினும், அவர் வழியிலேயே உயிரிழந்து விட்டார் என மருத்துவர்கள் அறிவித்தனர். இவர், கடந்த ஒரு வாரத்தில் நாக்பூர் விமான நிலையத்தில் உயிரிழக்கும் 2-வது நபர் ஆவார்.

கடந்த 17-ந்தேதி நாக்பூரில் இருந்து புனே நோக்கி செல்லும் விமானம் ஒன்றை இயக்குவதற்காக காத்திருந்த 40 வயது விமானி பாதுகாப்பு பகுதியில் அமர்ந்திருந்தபோது மரணம் அடைந்த நிலையில், பயணி தேவானந்த் உயிரிழந்து உள்ளார். அவருடைய உடல் பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டு உள்ளது.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com