

புதுடெல்லி,
மிக முக்கிய பிரமுகர்கள் பயன்பாட்டுக்காக, அகஸ்டாவெஸ்ட்லேண்ட் நிறுவனத்திடம் இருந்து 12 ஹெலிகாப்டர்கள் வாங்க போடப்பட்ட ஒப்பந்தத்தில், ரூ.423 கோடி லஞ்சம் கைமாறியதாக புகார் எழுந்தது. இந்த ஊழல் வழக்கை சி.பி.ஐ.யும், அமலாக்கப்பிரிவும் விசாரித்து வருகின்றன. லஞ்சம் பெற்ற இடைத்தரகர் கிறிஸ்டியன் மைக்கேல், கடந்த மாதம் துபாயில் இருந்து இந்தியாவுக்கு நாடு கடத்தி கொண்டு வரப்பட்டார். அவர் தற்போது சிறையில் உள்ளார்.
இந்நிலையில், இந்த பேரத்தில் மற்றொரு இடைத்தரகராக செயல்பட்ட துபாயை சேர்ந்த ராஜீவ் சக்சேனா என்பவர் நேற்று துபாயில் இருந்து நாடு கடத்தி டெல்லிக்கு கொண்டு வரப்பட்டார். அவர் அமலாக்கப்பிரிவிடம் ஒப்படைக்கப்பட்டார். அவருடைய மனைவி ஷிவானி, ஏற்கனவே கடந்த 2017ம் ஆண்டு சென்னை விமான நிலையத்தில் கைது செய்யப்பட்டார். அவர் தற்போது ஜாமீனில் உள்ளார். கைது செய்த இடைத்தரகர் ராஜீவ் சக்சேனாவை டெல்லி கோர்ட்டில் அமலாக்கப்பிரிவு ஆஜர்படுத்தியது.