போர் பதற்றம்: ராஜஸ்தானின் ஜெய்சால்மர் நகரில் ஊரடங்கு உத்தரவு அமல்

கடைகள் மற்றும் சந்தைகள் தொடர்ந்து மூடப்பட்டு இருக்கும் என தெரிவிக்கப்பட்டு உள்ளது.
ஜெய்சால்மர்,
ராஜஸ்தானின் ஜெய்சால்மர் நகரில் ஊரடங்கு உத்தரவு அமல்படுத்தப்பட்டு உள்ளது. இதற்காக மாவட்ட நிர்வாகம் மற்றும் போலீசார் கூட்டாக இணைந்து அதிகாரப்பூர்வ அறிவிப்பை வெளியிட்டு உள்ளனர். பொதுமக்கள் முழு அளவில் ஒத்துழைப்பை வழங்க வேண்டும் என கேட்டு கொள்ளப்பட்டு உள்ளது.
அந்த உத்தரவின்படி, மக்கள் அனைவரும் வீட்டிற்குள்ளேயே இருக்கும்படி அறிவுறுத்தப்பட்டு உள்ளது. வெளியே செல்வது தவிர்க்கப்பட வேண்டும் என கேட்டு கொள்ளப்பட்டு உள்ளது. அடுத்த உத்தரவு வரும்வரை, குழுக்களாக கூடுவது அல்லது ஏதேனும் பொது நிகழ்ச்சியை நடத்துவது ஆகியவற்றுக்கு கடுமையான தடை விதிக்கப்பட்டு உள்ளது. கடைகள் மற்றும் சந்தைகள் தொடர்ந்து மூடப்பட்டு இருக்கும் என தெரிவிக்கப்பட்டு உள்ளது.
போலீசாரும் நகர் முழுவம் ரோந்து சென்று, மக்கள் வீடுகளிலேயே தொடர்ந்து இருக்கும்படி வேண்டுகோளாக கேட்டு கொண்டனர். வாகன இயக்கமும் கூட நிறுத்தப்பட்டு உள்ளது. இந்த பாதுகாப்பு ஏற்பாடுகளுக்கு மக்கள் ஒத்துழைப்பு வழங்கும்படி அதிகாரிகள் வேண்டுகோள் விடுத்தனர். தேவையின்றி வெளியே செல்வது தவிர்க்கப்பட வேண்டும் என்றும் கேட்டு கொண்டனர்.
இதேபோன்று, பார்மர் மாவட்டத்திலும் சிவப்பு எச்சரிக்கை விடப்பட்டு உள்ளது. மக்கள் அனைவரும் வீட்டுக்குள்ளேயே பாதுகாப்பாக இருக்கும்படி கலெக்டர் டினா தபி, வலியுறுத்தினார். பொதுமக்கள் சந்தைகளுக்கோ அல்லது பொது இடங்களுக்கோ செல்ல வேண்டாம் என்றும் அவர் கேட்டு கொண்டார்.