

கொச்சி,
இந்திய கடற்படையை நவீனமயமாக்கும் நோக்கில், உள்நாட்டிலேயே அதிநவீன தொழில்நுட்பத்துடன் புதிய போர்க்கப்பல்கள் கட்டப்பட்டு வருகின்றன. அந்த வகையில், கடற்படையின் 2-வது பெரிய நவீன ஆய்வு கப்பலாக ‘ஐ.என்.எஸ். சான்ஷோடாக்’ உருவாக்கப்பட்டு உள்ளது.
கொல்கத்தாவில் கடந்த மாதம் 21-ந் தேதி நடைபெற்ற நிகழ்ச்சியில், பிரதமர் மோடி ஐ.என்.எஸ். சான்ஷோடாக் என்ற போர் கப்பலை இந்திய கடற்படையில் இணைத்து நாட்டிற்கு அர்ப்பணித்தார். இந்திய கடற்படையில் இணைக்கப்பட்டதை தொடர்ந்து, கொல்கத்தாவில் இருந்து தனது முதல் பயணத்தை தொடங்கிய ‘ஐ.என்.எஸ். சான்ஷோடாக்’ கப்பல், முதன்முறையாக கேரளா மாநிலத்தில் உள்ள கொச்சி கடற்படை தளத்திற்கு வந்தடைந்தது.
இது கடற்படையின் 2-வது ஆய்வு கப்பல் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த கப்பலுக்கு பாரம்பரிய முறைப்படி தண்ணீரை பீய்ச்சி அடித்து கடற்படையினர் வரவேற்பு அளித்தனர். அப்போது பேண்ட் வாத்தியம் இசைக்கப்பட்டது. இதில் கடற்படை அதிகாரிகள், ஊழியர்கள் கலந்துகொண்டனர்.
இந்த கப்பல் மூலம் தென்பிராந்திய கடற்படை ஆய்வு திறன் அதிகரிக்கப்பட்டு, இந்திய பெருங்கடலில் இந்தியாவின் கடற்படை பலத்தை அதிகரிக்க உதவும் என்று கடற்படையினர் தெரிவித்தனர்.