

புதுடெல்லி,
காங்கிரஸ் மூத்த தலைவர் சாம் பிட்ரோடா, சீக்கியர் படுகொலை பற்றிய கேள்விக்கு அது 1984-ல் நடந்தது. அதற்கு என்ன? என்று கேட்டதை, பிரதமர் மோடி உள்ளிட்ட பா.ஜனதா தலைவர்கள் விமர்சித்தனர்.
இதையடுத்து, இதுகுறித்து சாம் பிட்ரோடா கூறியதாவது:- எனது பேட்டியில் 3 வார்த்தைகளை வைத்து பா.ஜனதா, உண்மையை திரித்து கூறுகிறது. வாய்மையே வெல்லும், பொய் அம்பலமாகும். மக்களை பிளவுபடுத்தி, தங்கள் தோல்வியை மறைப்பதே அவர்களின் நோக்கம். அவர்களிடம் சொல்வதற்கு நேர்மறையான விஷயங்களே இல்லை.
இவையெல்லாம் கடந்த காலத்தில் நடந்தவை. இந்த தேர்தலுக்கு பொருத்தமற்றவை. கடந்த 5 ஆண்டுகளில் மோடி அரசு என்ன செய்தது என்பதைத்தான் பார்க்க வேண்டும். 1984-ம் ஆண்டு, கடினமான நேரத்தில் சீக்கிய சகோதர, சகோதரிகள் அடைந்த வேதனையை நான் உணர்ந்துள்ளேன். அப்போது நடந்த அராஜகங்களால் ஆழ்ந்த வேதனை அடைந்துள்ளேன். இவ்வாறு அவர் கூறினார்.