

போபால்,
மத்திய பிரதேச முதல்வர் சிவராஜ் சிங் சவுகான் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு, போபாலில் உள்ள மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார். சிகிச்சையில் உள்ள போதும், மருத்துவமனையில் இருந்த படியே காணொலி வாயிலாக தனது அமைச்சர்களுடன் ஆலோசனை கூட்டம் நடத்தினார்.
அப்போது பேசிய அவர்,மருத்துவமனையில் எனது துணிகளை நானே துவைத்துக்கொள்கிறேன். ஏனெனில், கொரோனா நோயாளிகள் தங்களது துணிகளை துவைக்க கொடுக்கக் கூடாது.
இவ்வாறு துணிகளை துவைப்பதன் மூலம் சில பலன்களையும் நான் பெற்றுள்ளேன். எனது கையில் அறுவை சிகிச்சை செய்திருந்தேன். பல பிசியோதெரபி பயிற்சி முடித்த பின்பும், கைகளில் விரல்களை மடக்கி அமுக்க முடியாமல் இருந்து வந்தது. தற்போது, துணிகளை துவைத்த பின்னர் என்னால் கைகளை அமுக்க முடிகிறது. நம்மால் முடிந்த சிறிய விஷயங்களை நாமே செய்ய வேண்டும் என்று நான் நினைக்கிறேன் என்றார்.