வயநாடு நிலச்சரிவு: அறிக்கை தாக்கல் செய்ய கேரள அரசுக்கு உத்தரவு

தமிழ்நாட்டில் எடுக்கப்பட்டுள்ள முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்து தமிழக அரசுக்கு தென் மண்டல தேசிய பசுமை தீர்ப்பாயம் உத்தரவிட்டுள்ளது.
வயநாடு நிலச்சரிவு: அறிக்கை தாக்கல் செய்ய கேரள அரசுக்கு உத்தரவு
Published on

கோழிக்கோடு,

கேரள மாநிலம் வயநாட்டில் உள்ள முண்டக்கை, சூரல்மலை, மேப்பாடி ஆகிய மலைக்கிராமங்களில் கடந்த 30-ந்தேதி ஏற்பட்ட பயங்கர நிலச்சரிவு நாட்டையே அதிர்ச்சிக்குள்ளாகியுள்ளது. இந்த நிலச்சரிவில் சிக்கி இதுவரை 299 பேர் உயிரிழந்துள்ள நிலையில், மீட்புப்பணிகள் தொடர்ந்து நடைபெற்று வருகிறது.

இந்த நிலையில், வயநாடு நிலச்சரிவு தொடர்பான வழக்கை தென் மண்டல தேசிய பசுமை தீர்ப்பாயம் தாமாக முன்வந்து எடுத்துள்ளது. இந்த வழக்கு தீர்ப்பாயத்தின் நீதிபதி புஷ்பா மற்றும் உறுப்பினர் சத்யகோபால் அமர்வு முன்பு விசாரணைக்கு வந்தது.

அப்போது, மீட்பு பணி, சேத விபரம், இனி இதுபோன்று நடக்காமல் பார்த்துக்கொள்வது உள்ளிட்டவை குறித்து கோட்டயம், இடுக்கி, வயநாடு மாவட்ட ஆட்சியர்கள் விரிவான அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும் என உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. மேலும், நிலச்சரிவு ஏற்பட்ட பகுதிகளில் உள்ள சுரங்கங்கள், குவாரிகள், சாலைகள், கட்டுமான திட்டங்கள் உள்ளிட்டவை குறித்து அறிக்கை தாக்கல் செய்ய கேரள அரசுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.

வயநாடு நிலச்சரிவை பாடமாக எடுத்துக்கொண்டு தமிழ்நாட்டில் எடுக்கப்பட்டுள்ள முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்தும் நீலகிரி, கோவை மாவட்ட ஆட்சியர்கள், தமிழக அரசுக்கு தென் மண்டல தேசிய பசுமை தீர்ப்பாயம் உத்தரவிட்டுள்ளது. மேலும், வழக்கின் விசாரணை செப்டம்பர் 9-ம் தேதிக்கு தள்ளிவைக்கப்பட்டுள்ளது.  

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com