

வயநாடு,
335 பேரை பலி வாங்கிய வயநாடு நிலச்சரிவு நிகழ்ந்து 2 ஆண்டுகள் ஆனது. இதை நினைவுகூறும் வகையில் உறவினர்கள், மக்கள் கல்லறையில் கண்ணீர் மல்க அஞ்சலி செலுத்தினர்.
கேரளம் மாநிலம் வயநாடு மாவட்டம் சூரல்மலை, முண்டக்கை, புதுமலை உள்ளிட்ட பகுதிகளில் கடந்த 2024-ம் ஆண்டு ஜூலை மாதம் 30-ந் தேதி பயங்கர நிலச்சரிவு ஏற்பட்டது. இதனால் ஆறுகளில் காட்டாற்று வெள்ளம் பெருக்கெடுத்து ஓடியது. இரவில் வீடுகளில் தூங்கி கொண்டிருந்த ஏராளமானோர் அடித்து செல்லப்பட்டனர். பாறைகள், கற்கள் உருண்டு வந்து. கிராமங்கள் இருந்த இடமே தெரியாமல் போனது.
நிலச்சரிவின் கோர தாண்டவத்தில் 298 பேர் உயிரிழந்தனர். 410 குடும்பத்தினர் பாதிக்கப்பட்டனர். 37 பேரை காணவில்லை. இதுவரை அவர்களுடைய உடல்களை கண்டறிய முடியவில்லை. எனவே, அவர்களை இறந்தவர்களாக கேரளம் அரசு அறிவித்தது. இதன் மூலம் மொத்தம் 335 பேர் உயிரிழந்தனர். நிலச்சரிவில் உயிர் பிழைத்தவர்களுக்கு மறுவாழ்வு அளிக்கும் வகையில் அரசு மூலம் முதல் கட்டமாக 178 பேருக்கு புதிய வீடுகள் கட்டி கொடுக்கப்பட்டது. 2-வது கட்டமாக 157 வீடுகள் கட்டப்பட்டு வருகிறது.
இந்த நிலச்சரிவு நிகழ்ந்து நேற்றுடன் 2 ஆண்டுகள் ஆனது. இதை நினைவு கூறும் வகையில் சூரல்மலை. முண்டக்கை பகுதிகளில், நிலச்சரிவில் உயிரிழந்தவர்களின் உடல்கள் அடக்கம் செய்யப்பட்ட இடத்தில் உறவினர்கள் மற்றும் மக்கள் கண்ணீர் மல்க அஞ்சலி செலுத்தினர். கல்லறைகள் மீது மலர்கள் தூவினர். அப்போது பரவலாக மழை பெய்தது. கொட்டும் மழையிலும் அவர்கள் அஞ்சலி செலுத்தியதை காண முடிந்தது.
தாயை பிரிந்த மகன், பிள்ளைகளை இழந்த தாய், தந்தையை இழந்த குடும்பம், உறவினர்களை இழந்தவர்கள், மாணவர்களை இழந்த பள்ளி ஆசிரியர்கள், கணவரை இழந்த மனைவி, மனைவியை இழந்த கணவர் என பலர் நீங்காத நினைவுகளுடன் மவுனமாக நின்றிருந்தனர். மேலும் வருவாய்த்துறை மந்திரி அனில் குமார். விவசாயத்துறை மந்திரி சித்திக் மற்றும் மக்கள் பிரதிநிதிகள் கல்லறைகளில் மாலை வைத்து அஞ்சலி செலுத்தினர். அதோடு அங்கு நடந்த சர்வ மத பிரார்த்தனையில் கலந்துகொண்டனர்.