

புதுடெல்லி,
இலங்கையில் பொருளாதார நெருக்கடியை தொடர்ந்து மக்கள் வெகுண்டெழுந்து தொடர் போராட்டத்தில் ஈடுபட்டனர். மக்களின் போராட்டத்துக்கு அடிபணிந்து பிரதமர் பொறுப்பில் இருந்து மகிந்த ராஜபக்சே பதவி விலகினர். இதையடுத்து, அங்கு போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் மீது ராஜபக்சே ஆதரவாளர்கள் தாக்குதல் நடத்தியதால் வன்முறை வெடித்தது.
மகிந்த ராஜபக்சே உள்பட ஆளும் கட்சியை சேர்ந்த சுமார் 35 அரசியல் தலைவர்களின் வீடுகள் நேற்று தீ வைத்து எரிக்கப்பட்டன. இந்த வன்முறையில் 8 பேர் உயிரிழந்துள்ளனர். நூற்றுக்கும் மேற்பட்ட வாகனங்கள் சேதப்படுத்தப்பட்டுள்ளன.பேருந்துகளுக்கு தீ வைக்கும் சம்பவங்களும் நடைபெற்றன. போராட்டக்காரர்கள் போலீசார் மீதும் தாக்குதல் நடத்தப்பட்டதால் பதற்றம் நீடிக்கிறது. மேலும் முன்னாள் பிரதமர் மகிந்த ராஜபக்சே தஞ்சம் அடைந்துள்ள கடற்படை தளத்தை பொதுமக்கள் முற்றுகையிட்டு போராட்டம் நடத்தி வருகின்றனர்.
இலங்கையில், நிலவும் அசாதாரண சூழலை கட்டுக்குள் கொண்டு வர இந்தியா படைகளை அனுப்பலாம் என்று இலங்கை ஊடகங்களில் செய்தி வெளியானது. ஆனால், இதை திட்டவட்டமாக மறுத்துள்ள இந்திய வெளியுறவுத்துறை அமைச்சகம், இலங்கைக்கு படைகள் எதுவும் அனுப்பப்படாது என்று தெரிவித்துள்ளது.
முன்னதாக ராஜபக்சே குடும்பத்திற்கு மிக நெருக்கமானவராக கருதப்படுபவரும்,பா.ஜனதா எம்.பியுமான சுப்பிரமணியன் சுவாமி இலங்கையில் அரசியலமைப்பு நிலையை மீட்டெடுக்க இந்தியா கண்டிப்பாக இந்திய ராணுவத்தை அனுப்ப வேண்டும். தற்போது இந்திய எதிர்ப்பு அந்நிய சக்திகள் மக்களின் கோபத்தை தங்களுக்கு சாதகமாக பயன்படுத்திக் கொள்கின்றனர். இது இந்தியாவின் தேசிய பாதுகாப்பை பாதிக்கிறது என கூறி இருந்தார். முதலில் இலங்கையின் பெயரை நேரடியாகச் சொல்லாத சுவாமி, பின்னர் தனது அறிக்கை இலங்கை பற்றியது என்று கூறினார்.
சுப்பிரமணியன் சுவாமியின் இந்த கோரிக்கைக்கு இலங்கையில் போராட்டம் நடத்திய மக்கள் கடும் கோபத்தில் உள்ளனர்.
இந்த நிலையில் சுப்பிரமணியன் சுவாமி வெளியிட்டு உள்ள மற்றொரு டுவிட்டில் பிரதமரின் இல்லம்கூட எரிக்கப்படுகின்றது. எம்.பி.க்கள் கும்பலால் சுட்டுக் கொலப்பட்டு உள்ளனர். அதற்குக் காரணமானவர்கள் இரக்கம் காட்ட தகுதியானவர்கள் அல்ல. நமது அயல்நாடு மற்றுமொரு லிபியாவாக மாறுவதற்கு அனுமதிக்க முடியாது என கூறி உள்ளார்.