

புதுடெல்லி,
கொரோனா தொற்று நாடு முழுவதும் வேகமாக பரவி வருகிறது. கடந்த சில தினங்களாக தினசரி பாதிப்பு 75 ஆயிரத்தை தாண்டி பதிவாகிறது. இதேவேகத்தில் செல்லும் பட்சத்தில் இன்னும் சில தினங்களில் கொரோனா தொற்று பாதிப்பில் இந்தியா பிரேசிலை பின்னுக்கு தள்ளி 2- ஆம் இடத்திற்கு சென்றுவிடும். இந்தியாவில் இன்று காலை சுகாதாரத்துறை அமைச்சகம் வெளியிட்ட தகவலின் படி கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டவர்கள் எண்ணிக்கை 36,21,246- ஆக உள்ளது.
இந்த நிலையில், தீபாவளி பண்டிகைக்கு முன்பாக கொரோனா கட்டுக்குள் வந்துவிடும் என்று டெல்லி சுகாதாரத்துறை மந்திரி சத்யேந்திர ஜெயின் நம்பிக்கை தெரிவித்துள்ளார். இது குறித்து டெல்லி சுகாதாரத்துறை மந்திரி கூறுகையில், கொரோனா தொற்றை கண்டறிய அதிக சோதனை நடத்தப்படுகிறது.
அதிக சோதனைக்கு மத்திய அரசு ஆட்சேபம் தெரிவிக்காத வரையில் எங்களுக்கு மத்திய அரசிடம் இருந்து சிறப்பு உதவி எதுவும் தேவையில்லை. மத்திய அரசிடம் இருந்து சோதனைக் கருவிகள் வாங்குவதற்கு பதிலாக நாங்கள், சந்தைகளில் இருந்து வாங்குகிறோம். மத்திய சுகாதாரத்துறை மந்திரி கூறியதை போல, தீபாவளிக்கு முன்பாக கொரோனா கட்டுக்குள் வந்துவிடும் என நாங்களும் நம்புகிறோம் என்றார்.