'மேகதாது அணை கட்டுவதற்கான அடிப்படை பணிகளை தொடங்கி விட்டோம்' துணை முதல்-மந்திரி டி.கே.சிவக்குமார் தகவல்

கர்நாடகத்தில் தற்போது விவசாய நிலம் 6 சதவீதம் அதிகரிக்கப்பட்டுள்ளது என்று துணை முதல்-மந்திரி டி.கே.சிவக்குமார் கூறியுள்ளது.
'மேகதாது அணை கட்டுவதற்கான அடிப்படை பணிகளை தொடங்கி விட்டோம்' துணை முதல்-மந்திரி டி.கே.சிவக்குமார் தகவல்
Published on

பெங்களூரு

பெங்களூரு, ராமநகர் உள்பட 5 மாவட்டங்களில் நிலவும் தண்ணீர் பிரச்சினையை தீர்க்கவும், நீர்மின் நிலையம் மூலம் மின்சார உற்பத்தி செய்யும் நோக்கிலும், உபரி நீர் வீணாகாமல் தடுக்கவும் ராமநகர் மாவட்டம் மேகதாது எனும் இடத்தில் காவிரியின் குறுக்கே அணை கட்ட கர்நாடக அரசு முடிவு செய்து அதற்கான பணிகளில் ஈடுபட்டு வருகிறது.

இந்த திட்டத்திற்காக மாநில அரசு ஏற்கனவே ரூ.1,000 கோடி நிதி ஒதுக்கி உள்ளது. மேலும் அணை கட்ட ஒப்புதலுக்காக மத்திய அரசிடம் முறையிட்டுள்ளது. ஆனால் இந்த அணை கட்டப்பட கூடாது என்று தமிழகம், புதுச்சேரி மற்றும் கேரளா ஆகிய மாநிலங்கள் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றன. மேலும் சுப்ரீம் கோர்ட்டிலும் தமிழக அரசு வழக்கு தொடுத்துள்ளது.

இதுஒருபுறம் இருக்க கர்நாடக அரசு சத்தமின்றி மேகதாதுவில் அணை கட்டுவதற்கான ஆயத்த பணிகளை மேற்கொண்டு வருகிறது. தற்போது அங்கு அணையின் நீர்த்தேக்க பகுதிக்கான நிலத்தை கணக்கிடும் பணி முடிந்துள்ளது. மேலும் அந்த நிலங்களை கையகப்படுத்தும் பணியும் தொடங்கப்பட்டு இருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளது.

மேலும் ராமநகரில் இதற்கென அலுவலகம் ஒன்றை திறந்திருப்பதாகவும் கூறப்படுகிறது.இதுகுறித்து முதல்-மந்திரி சித்தராமையா கூறுகையில், 'காவிரி தீர்ப்பாயத்தின்படி ஆண்டுக்கு கர்நாடகத்துக்கு காவிரியில் பங்கான 284 டி.எம்.சி.(ஒரு டி.எம்.சி. என்பது 100 கோடி கன அடி) நீரை முழுமையாக பயன்படுத்துகிறோம்' என்றார்.

இதுகுறித்து துணை முதல்-மந்திரியும், நீர்ப்பாசன துறையை தன்வசம் வைத்திருப்பவருமான டி.கே.சிவக்குமாரிடம் கேட்டபோது, 'கர்நாடகத்தில் தற்போது விவசாய நிலம் 6 சதவீதம் அதிகரிக்கப்பட்டுள்ளது. மேலும் கபினி அணையில் இருந்து பெறப்படும் உபரி நீரால் பாசன பகுதியில் விவசாயம் மேற்கொள்ள நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது. மேகதாதுவில் அணை கட்டுவதற்கான அடிப்படை பணிகளை தொடங்கி விட்டோம்' என்றார்.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com