

புதுடெல்லி,
காவிரி விவகாரத்தில் பா.ஜனதா தவிர எந்த கட்சி போராட்டம் நடத்தினாலும் ஆதரவு தருவது என எங்கள் கட்சியின் தலைமை நிர்வாகக்குழு கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டது. தமிழகத்தில் இன்று (வியாழக்கிழமை) நடைபெறவுள்ள போராட்டத்துக்கு ஆதரவு தரும்படி தி.மு.க. செயல்தலைவர் மு.க.ஸ்டாலின் கடிதம் எழுதியிருந்தார். அதன்பேரில் போராட்டத்துக்கு ஆதரவு அளிப்பதுடன், இதில் எங்கள் கட்சியின் தலைவர்களும், தொண்டர்களும் பங்கேற்பார்கள்.
வருகிற 10ந் தேதி சென்னையில் ஐ.பி.எல். கிரிக்கெட் போட்டி நடப்பதாக அறிவிப்பு வெளியாகி உள்ளது. காவிரி மேலாண்மை வாரிய விவகாரத்தில் மக்கள் கொந்தளித்து போராட்டம் நடத்தி வரும் நிலையில், விவசாயிகள் வாடி வதங்கும் சூழ்நிலையில் ஐ.பி.எல். போட்டியை நடத்துவது தமிழகத்துக்கு மானக்கேடு என்று கருதுகிறோம்.
எனவே, போட்டியை தமிழக அரசு ரத்து செய்யவேண்டும். இல்லையென்றால், எங்கள் கட்சியின் ஆயிரக்கணக்கான தொண்டர்கள் மைதானத்துக்குள் நுழைந்து போட்டியை தடுத்து நிறுத்துவோம். போட்டியில் பங்கேற்கும் கிரிக்கெட் வீரர்களையும் சிறை பிடிப்போம்.
இவ்வாறு அவர் கூறினார்.