இல்ல தலைவிகளுக்கு மாதந்தோறும் ரூ.2 ஆயிரம் வழங்குவோம்; பிரியங்கா காந்தி பேச்சு

அசாம் தேர்தல் பிரசார கூட்டத்தில் இல்ல தலைவிகள் அனைவருக்கும் மாதந்தோறும் ரூ.2 ஆயிரம் வழங்குவோம் என பிரியங்கா காந்தி பேசியுள்ளார்.
இல்ல தலைவிகளுக்கு மாதந்தோறும் ரூ.2 ஆயிரம் வழங்குவோம்; பிரியங்கா காந்தி பேச்சு
Published on

தேஜ்பூர்,

அசாம் சட்டசபைக்கு 3 கட்டமாக தேர்தல் நடைபெற உள்ளது. இதன்படி, வருகிற 27ந்தேதி 12 மாவட்டங்களில் உள்ள 47 தொகுதிகளுக்கு முதற்கட்ட தேர்தல் நடைபெறும்.

இதனையடுத்து ஏப்ரல் 1ந்தேதி 13 மாவட்டங்களில் உள்ள 39 தொகுதிகளுக்கு 2வது கட்ட தேர்தல் நடைபெறும். தொடர்ந்து ஏப்ரல் 6ந்தேதி 12 மாவட்டங்களில் உள்ள 40 தொகுதிகளுக்கு 3வது கட்ட தேர்தல் நடைபெறும்.

தேர்தலை முன்னிட்டு அரசியல் கட்சிகள் பிரசாரத்தில் ஈடுபட்டு வருகின்றன. காங்கிரஸ் கட்சியின் பொது செயலாளரான பிரியங்கா காந்தி அசாமின் தேஜ்பூரில் பிரசாரத்தில் இன்று ஈடுபட்டார்.

அவர் பேசும்பொழுது, எங்களுடைய கட்சி ஆட்சி அதிகாரத்திற்கு எப்பொழுது வருகிறதோ, குடியுரிமை திருத்த சட்டம் அமல்படுத்தப்படாது என்று உறுதி செய்வதற்காக சட்டம் ஒன்று இயற்றப்படும். ஒவ்வொரு மாதமும் 200 யூனிட் இலவச மின்சாரம் வழங்கப்படும் என கூறியுள்ளார்.

கிரஹனி சம்மான் என்ற திட்டத்தின் பெயரால், இல்ல தலைவிகள் அனைவருக்கும் மாதந்தோறும் ரூ.2 ஆயிரம் வழங்குவோம். தேயிலை தோட்டங்களில் பணி செய்யும் பெண்களுக்கு நாளொன்றுக்கு ரூ.365 வழங்கப்படும்.

நாங்கள் 5 லட்சம் புதிய அரசு வேலை வாய்ப்புகளை உருவாக்குவோம். இவையெல்லாம் வாக்குறுதிகள் அல்ல. உத்தரவாதம் என அவர் கூறியுள்ளார்.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com