

விசாகப்பட்டினம்,
ஆந்திர மாநிலம் விஜயநகரம் மாவட்டத்தில், தம்பியின் திருமணக் கொண்டாட்டத்தின்போது எதிர்பாராத விதமாக அண்ணன் மின்சாரம் தாக்கி உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. இந்த துயரத்தால் நடைபெறவிருந்த திருமணம் பாதியிலேயே நிறுத்தப்பட்டது.
விஜயநகரம் மாவட்டம் மிர்த்திவலசா கிராமத்தில் இச்சம்பவம் நிகழ்ந்துள்ளது. ஐதராபாத்தில் மென்பொருள் பொறியாளராக (Software Engineer) பணியாற்றி வந்த சதிஷ் (32), தனது தம்பியின் திருமணத்திற்காக சொந்த ஊருக்குத் திரும்பியிருந்தார்.
திருமண வேலைகளில் மிகுந்த உற்சாகத்துடன் ஈடுபட்டு வந்த சதிஷ், எதிர்பாராத விதமாக மின்சாரம் தாக்கி உயிரிழந்தார். கடந்த ஆண்டு தான் சதிஷிற்கு திருமணம் நடைபெற்றது என்பது குறிப்பிடத்தக்கது.
மகிழ்ச்சியாக இருக்க வேண்டிய திருமண வீடு, சதிஷின் மறைவால் சோகத்தில் மூழ்கியது. குடும்பத்தில் ஏற்பட்ட இந்த பேரிழப்பைத் தொடர்ந்து, நடைபெறவிருந்த அவரது தம்பியின் திருமணம் ரத்து செய்யப்பட்டது.
கொண்டாட்டங்கள் நிறைந்திருக்க வேண்டிய திருமண நாளில், வாலிபர் உயிரிழந்த சம்பவம் அந்த கிராமம் முழுவதையும் சோகத்தில் ஆழ்த்தியுள்ளது. இதுகுறித்து வழக்குப் பதிவு செய்துள்ள போலீஸார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.