

கொல்கத்தா,
மேற்கு வங்க மாநிலத்தில் ஒரு புனித தலத்தைப் பற்றி சர்ச்சைக்குரிய வகையில் பேஸ்புக்கில் பதிவு செய்த தகவல் வைரலாகப் பரவியதையடுத்து, பஷிர்காத் பகுதியில் மதக்கலவரம் ஏற்பட்டது. இரண்டு மதத்தைச் சேர்ந்தவர்கள் மாறி மாறி தாக்கிக் கொண்டதால் அப்பகுதி போர்க்களமாக மாறியது. இதையடுத்து அருகில் உள்ள பகுதிகளுக்கும் கலவரம் பரவியது.
கலவரக்காரர்கள் சாலை மறியலில் ஈடுபட்டு, கடைகளை அடித்து நொறுக்கினர். போலீசார் குவிக்கப்பட்டும் நிலைமை கட்டுக்குள் வரவில்லை. கலவரத்தை அடக்க எல்லைப் பாதுகாப்பு படையை சேர்ந்த 400 வீரர்கள் வரவழைக்கப்பட்டு, பதற்றம் நிறைந்த பகுதிகளில் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக ஊரடங்கு உத்தரவும் பிறப்பிக்கப்பட்டுள்ளது. மத்திய உள்துறை அமைச்சகமும் சம்பவம் தொடர்பாக மாநில அரசிடம் அறிக்கை கோரியுள்ளது. இதற்கிடையில், அமைதி காக்குமாறு மக்களை முதல் மந்திரி மம்தா பானர்ஜி கேட்டுக்கொண்டுள்ளார்.
இந்நிலையில், சட்டம் ஒழுங்கு நிலை மிகவும் மோசமடைந்துள்ளதால் மேற்கு வங்க அரசை உடனடியாக கலைத்து, ஜனாதிபதி ஆட்சியை அமல்படுத்த வேண்டும் என பா.ஜ.க.வினர் மத்திய அரசிடம் கோரிக்கை விடுத்துள்ளனர்.