

புதுடெல்லி,
இந்தியாவில் தங்கம் விலை நாளுக்கு நாள் புதிய உச்சத்தை எட்டி வருகிறது. கடந்த ஆண்டு ஏப்ரல்-டிசம்பர் மாதங்களில், இந்தியாவின் தங்க இறக்குமதி 50 பில்லியன் அமெரிக்க டாலர்(சுமார் ரூ.4.54 லட்சம் கோடி) அளவிற்கு அதிகரித்துள்ளது. இறக்குமதி அதிகரித்தாலும், இந்த ஆண்டு ஜனவரியில் தங்கத்தின் விலையில் திடீர் உயர்வு ஏற்பட்டுள்ளது.
இந்த நிலையில், தங்கம் விலை உயர காரணம் என்ன? என்பது குறித்து மத்திய நிதி மந்திரி நிர்மலா சீதாராமன் பதிலளித்துள்ளார். இது தொடர்பாக டெல்லியில் இன்று செய்தியாளர்களிடம் பேசியபோது அவர் கூறியதாவது;-
“பண்டிகை காலம், அட்சய திருதியை போன்றவற்றின் காரணமாக, இந்தியாவில் உள்நாட்டு நுகர்வுக்கான தங்கத்தின் தேவை அதிகரித்துள்ளது. உலகளவில் மத்திய வங்கிகள் அதிக அளவில் தங்கம் வாங்குவதே தங்கத்தின் விலை உயர்வுக்குக் காரணம். அரசாங்கமும், ரிசர்வ் வங்கியும் தங்கம் உள்ளிட்ட உலோகங்களின் இறக்குமதியை உன்னிப்பாக கண்காணித்து வருகிறோம்.
இந்தியாவை பொறுத்தவரை தங்கத்தை வாங்குவதும், தங்கத்தில் முதலீடு செய்வதும் தற்போது ஆபத்தான விகிதத்தை எட்டவில்லை. அது குறிப்பிட்ட வரம்பைத் தாண்டிச் செல்லவில்லை என்று நான் நினைக்கிறேன். ஆனால் நிச்சயமாக, ரிசர்வ் வங்கியும் அதைக் கண்காணிக்கும்.”
இவ்வாறு அவர் தெரிவித்தார்.