கொரோனா தொற்று காலத்தில் வேளாண் சட்டங்களை நிறைவேற்ற என்ன அவசரம்? நகல்களை கிழித்த கெஜ்ரிவால்

கொரோனா தொற்று காலத்தில் நாடாளுமன்றத்தில் வேளாண் சட்டங்களை நிறைவேற்றுவதற்கு என்ன அவசரம் வந்தது? என கேள்வி எழுப்பிய டெல்லி முதல் மந்திரி கெஜ்ரிவால் சட்ட நகல்களை கிழித்துள்ளார்.
கொரோனா தொற்று காலத்தில் வேளாண் சட்டங்களை நிறைவேற்ற என்ன அவசரம்? நகல்களை கிழித்த கெஜ்ரிவால்
Published on

புதுடெல்லி,

மத்திய அரசின் புதிய வேளாண் சட்டங்களை திரும்பப்பெற வலியுறுத்தி டெல்லியில் விவசாயிகள் நடத்தி வரும் போராட்டம் இன்று 22வது நாளாக நீடித்து வருகிறது. போராட்டம் முடிவுக்கு வர விவசாயிகளுடன் மத்திய அரசு நடத்திய பலசுற்று பேச்சுவார்த்தைகள் தோல்வியடைந்து உள்ளன. இதனால் போராட்டம் தொடர்ந்து தீவிரமடைந்து வருகிறது.

சிங்கு, திக்ரி மற்றும் காசிப்பூர் உள்ளிட்ட எல்லைகளில் விவசாயிகள் முகாமிட்டு உள்ளனர். இதனால், டெல்லியில் பல சாலைகள் மூடப்பட்டுள்ளன. பாதுகாப்பிற்காக எல்லை பகுதிகளில் போலீசாரும் குவிக்கப்பட்டு உள்ளனர். ஆளில்லா விமானம் வழியேயும் தீவிர கண்காணிப்பு பணி நடந்து வருகிறது.

டெல்லி போக்குவரத்து காவல் துறையினர் தகவலின்படி சிங்கு, ஆச்சண்டி, பியாவ் மணியாரி, சபோலி மற்றும் மங்கேஷ் எல்லைகள் மூடப்பட்டுள்ளன. லம்பூர், சபியாபாத் மற்றும் சிங்கு கட்டண வரி சாலைகள் வழியாக மாற்று வழித்தடங்களில் பயணிகள் செல்லுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது.

அதே நேரத்தில் முகர்பா மற்றும் ஜி.டி.கே சாலையில் இருந்து போக்குவரத்து திருப்பி விடப்பட்டுள்ளது. இதனால், தெற்கில் இருந்து டெல்லி செல்லும் பயணிகள், சொந்த மாநிலத்திற்கு திரும்புவோர் உள்ளிட்டவர்களின் வாகன போக்குவரத்து பாதிக்கப்பட்டு உள்ளது.

இந்த நிலையில், டெல்லியில் நடைபெறும் விவசாயிகளின் போராட்டம் பற்றி விவாதிக்க டெல்லி சட்டசபை சிறப்பு கூட்டத்தொடர் இன்று நடைபெற்றது.

இதில், கலந்து கொண்ட எம்.எல்.ஏ.க்களில் ஆளும் ஆம் ஆத்மி கட்சியை சேர்ந்த எம்.எல்.ஏ. மகேந்திர கோயல் என்பவர், மத்திய அரசின் வேளாண் சட்ட நகல்களை அவை உறுப்பினர்களின் முன்னிலையில் கிழித்துள்ளார். அவர் அவையில் நகல்களை கிழித்தபடியே கூறும்பொழுது, விவசாயிகளுக்கு எதிரான இந்த கருப்பு சட்டங்களை நான் ஏற்கமாட்டேன் என கூறினார்.

இதேபோன்று அவையில் டெல்லி முதல் மந்திரி கெஜ்ரிவால் பேசும்பொழுது, கொரோனா தொற்று காலத்தில் நாடாளுமன்றத்தில்

வேளாண் சட்டங்களை நிறைவேற்றுவதற்கு என்ன அவசரம் வந்தது? என கேள்வி எழுப்பினார். நாடாளுமன்ற மேலவையில் வாக்கெடுப்பு நடைபெறாமல் 3 சட்டங்கள் நிறைவேற்றப்படுவது இதுவே முதன்முறை.

அதனால், இந்த 3 சட்டங்களையும் இந்த சட்டசபையில் நான் கிழித்தெறிகிறேன். பிரிட்டிஷாரை விட மோசம் ஆக நடந்து கொள்ளாதீர்கள் என மத்திய அரசை நான் வேண்டி கேட்டு கொள்கிறேன் என்று கெஜ்ரிவால் கூறியுள்ளார்.

இதனை செய்வதற்காக நான் வேதனையடைகிறேன். இது என் நோக்கமல்ல. ஆனால், 2 டிகிரி செல்சியஸ் குளிரில் தெருக்களில் உறங்கி கொண்டிருக்கும் எனது நாட்டின் விவசாயிகளுக்கு நம்பிக்கை துரோகம் செய்ய என்னால் முடியாது என சட்ட நகல்களை கிழித்தபடி கூறினார்.

நான் முதலில் இந்நாட்டின் குடிமகன். அதன்பின்பே முதல் மந்திரி. 3 சட்டங்களையும் இந்த சட்டசபை நிராகரிக்கிறது. விவசாயிகளின் கோரிக்கைகளை கவனத்தில் கொள்ளும்படி மத்திய அரசை கேட்டு கொள்கிறேன் என அவர் கூறியுள்ளார்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com