

புதுடெல்லி:
வாட்ஸ்ஆப்பில் புதிய தனி நபர் சுதந்திர கொள்கையை அறிமுகம் செய்ததிலிருந்தே வாட்ஸ்ஆப்பைச் சுற்றிப் பல சர்ச்சைகள் ஆரம்பித்தன.
வாட்ஸ்ஆப் சமூக வலைதளம், சமீபத்தில் தன் தனிநபர் தகவல் பாதுகாப்பு தொடர்பான, 'பிரைவசி' கொள்கையில் மாற்றம் செய்வதாக அறிவித்தது. அதன்படி, 'பயனாளர்களின் தகவல்கள், தாய் நிறுவனமான, 'பேஸ்புக்' உடன் பகிர்ந்து கொள்ளப்படும்' என, அறிவிக்கப்பட்டது.
வாட்ஸ்ஆப்பின் இந்த புதிய கொள்கையால் பயனாளர்கள் அனுப்பும் செய்திகளின் பாதுகாப்புத் தன்மை, அந்தரங்கம் குறித்து பயனாளர்கள் அச்சம் தெரிவித்தனர்.
இந்நிலையில் இதுதொடர்பாக விளக்கமளித்த வாட்ஸ் ஆப் நிறுவனம், நண்பர்கள், குடும்பத்தினர் பகிர்ந்துகொள்ளும் தகவல்கள் பேஸ்புக் நிறுவனத்துடன் பகிரப்படாது. வாட்ஸ்அப் குரூப்புகள் தனித்தன்மையுடன் தொடர்ந்து செயல்படும்.
பயனாளர்கள் தகவல்களை நீக்கவோ, டவுன்லோடு செய்து கொள்ளவோ முடியும். பயனாளர்களின் தனிப்பட்ட மெசேஜ், அழைப்பு விவரத்தை சேமித்து வைக்க மாட்டோம். வாட்ஸ்அப் தொடர்பாக பல்வேறு வதந்திகள் பரவி வருவதால் விளக்கமளிக்கிறோம் என்று தெரிவித்தது.
இது தொடரபாக டெல்லி ஐகோர்ட்டில் வழக்கு தொடரபட்டது. இந்த வழக்கு இன்று விசாரணைக்கு வந்த போது, வாட்ஸ் ஆப் நிறுவனம் சார்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர் ஹாரிஸ் சால்வே கூறியதாவது:-
புதிய 'பிரைவசி' கொள்கையை, நாங்களாகவே நிறுத்தி வைக்கிறோம். இந்த கொள்கையை ஏற்க வேண்டும் என பயனாளர்களை கட்டாயப்படுத்த மாட்டோம். இதனை ஏற்காதவர்களுக்கு ,வழங்கப்படும் சேவையை குறைக்க மாட்டோம். தகவல் பாதுகாப்பு சட்டம் அமலுக்கு வரும் வரை, தனியுரிமைக் கொள்கையை நிறுத்தி வைத்திருப்போம் இந்த விவகாரம் தொடர்பாக, மத்திய அரசுக்கு அறிக்கை அளித்துள்ளோம். இவ்வாறு அவர் கூறினார்.