

புதுடெல்லி,
இந்தியாவில் குழந்தைகளுக்கு கொரோனா தடுப்பூசி போடும் பணி இன்னும் தொடங்கவில்லை. இதையொட்டி மத்திய அரசு சார்பில், தடுப்பூசிக்கான தேசிய தொழில் நுட்ப ஆலோசனை குழுவின் தலைவர் டாக்டர் என்.கே. அரோரா செய்தி நிறுவனம் ஒன்றுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-
குழந்தைகளுக்கு கொரோனா தடுப்பூசி போடும் பணி அடுத்த ஆண்டு ஜனவரி-மார்ச் காலகட்டத்தில் தொடங்கும். முதலில் இணைநோய் உள்ள குழந்தைகளுக்கு தடுப்பூசி போடப்படும்.
குழந்தைகளுக்காக கோர்பேவேக்ஸ், கோவாவேக்ஸ், ஜைகோவ்-டி, கோவேக்சின் ஆகிய 4 தடுப்பூசிகள் இந்த ஆண்டு இறுதிக்குள் வந்துவிடும். இவை குழந்தைகளுக்கான கொரோனா தடுப்பூசி திட்டத்தில் நிச்சயமாக முக்கிய பங்கு வகிக்கும். குழந்தைகளுக்கான தடுப்பூசி போடும் பணியை விரிவான முறையில் மிகவும் கவனமாகமேற்கொள்ள வேண்டியதிருக்கிறது. அதைத் தொடங்குவதற்கு முன் ஒவ்வொரு அம்சத்தையும் உறுதி செய்ய வேண்டியதும் உள்ளது.
தடுப்பூசி போதுமான வினியோகத்தையும், இருப்பையும் உறுதி செய்ய வேண்டியது உள்ளது. விலையை முடிவு செய்ய வேண்டும். தேவைப்பட்டால், சுகாதார பணியாளர்களுக்கு பயிற்சி அளிக்க வேண்டும். இதையெல்லாம் செய்து முடித்த பின்னர்தான் தடுப்பூசி போடும் பணியை தொடங்க முடியும்.
தடுப்பூசி போட வேண்டியவர்கள் பட்டியல் தயாராகிறது.
இவ்வாறு அவர் கூறினார்.